சசிகலா எப்படி இருக்காங்க.. போனை போட்டு விசாரித்த ரஜினி.. டிடிவி தினகரன் பரபரப்பு தகவல்
சென்னை: பொதுச் செயலாளர் என்ற முறையில் சசிகலாவுக்கே பொதுக் குழுவை கூட்டும் அதிகாரம் உள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் கூறுகையில் பொதுச் செயலாளர் என்ற முறையில் சசிகலாவுக்கே பொதுக் குழுவை கூட்டும் அதிகாரம் உள்ளது. உறவினர் என்ற முறையில்தான் சசிகலாவை நான் பார்க்க வந்தேன்.
ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டதும் சசிகலா அங்கு செல்வார். காவல்துறையை ஏவிவிட்டு எங்களை மிரட்டலாம் என நினைக்கிறார்கள்.

எம்எல்ஏக்கள் இல்லை
காவல் துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால் தொண்டர்கள் ஆங்காங்கே படைகளை போல முகாமிட்டு இருந்தனர். கடந்த 2 நாட்களாக பல்வேறு தரப்பிலிருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டது. அதிமுகவில் ஸ்லீப்பர் செல்கள் இன்னமும் இருக்கிறார்கள். அவர்கள் எம்எல்ஏக்களாகதான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

ஆர் கே நகர், தேனி
வரும் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடுவேன். ஒன்று ஆர் கே நகர், இன்னொன்று தேனியில் உள்ள ஏதாவது ஒரு தொகுதி ஆகும். சசிகலா உடல்நிலை குறித்து ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நன்றி
மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் டிடிவி தினகரன் கூறுகையில் இந்திய அரசியல் வரலாறு காணாத வகையில்
தியாகத் தலைவிக்கு வாஞ்சைமிகு வரவேற்பளித்த அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி! இரண்டு நாட்களாக பல்வேறு தரப்பில் இருந்து கொடுக்கபட்ட நெருக்கடிகளையும், அச்சுறுத்தல்களையும்,அத்துமீறல்களையும் மிகுந்த பொறுமையோடும் ராணுவக் கட்டுப்பாட்டோடும் எதிர்கொண்டு எனது அன்பு வேண்டுகோளை ஒவ்வோர் இடத்திலும் கழக உடன்பிறப்புகள் செயல்படுத்தி காட்டியதை வரலாறு எப்போதும் மறக்காது.

ஊடகங்கள்
ஒரு சாதனையாக நிகழ்த்தப்பட்டிருக்கும் சின்னம்மாவுக்கான வரவேற்பை உலகமெங்கும் கொண்டு சேர்த்த அனைத்து வகை ஊடகங்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications