சிறையிலுள்ள சசிகலாவை சந்திக்கப் போகும் பதவி போன எம்எல்ஏக்கள்... டென்ஷனில் தினகரன்!
Recommended Video

சென்னை : தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 10 பேர் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க உள்ளதாக டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது மாஜி எம்எல்ஏக்கள் சசிகலாவிடம் என்ன சொல்லப்போகிறார்கள் அதற்கு அவரது ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று டென்ஷனில் இருக்கிறாராம் டிடிவி.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பின்னர் டிடிவி. தினகரன் அடிக்கடி அவரை சிறையில் சென்று பார்த்து வருகிறார். தொடக்கத்தில் அதிமுகவைச் சேர்ந்த தம்பிதுரை, கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்டோர் சந்தித்துவிட்டு வந்தனர், ஆனால் அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை நீக்கி வைத்த பிறகு டிடிவி. தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சந்தித்து வருகின்றனர்.
தினகரன் புதிதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கிய போது வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட முக்கியமானவர்களை தினகரன் தன்னுடன் சிறைக்கு அழைத்து சென்றிருந்தார். அப்போது அவர்கள் அனைவரும் சசிகலாவின் உடல்நிலை பற்றி கேட்டறிந்ததோடு, அரசியல் விஷயங்களையும் பேசியதாகக் கூறி இருந்தனர்.

விடாப்பிடியாக இருந்த வெற்றிவேல்
இந்நிலையில் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மேல்முறையீடு செய்யலாம் என்று தினகரன் கூறி இருக்கிறார். ஆனால் வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் விடாப்பிடியாக தேர்தலை சந்திக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர்.

நிர்பந்தத்தால் தேர்தல் முடிவு
இதனால் தான் தினகரன் அணியிடையே தீர்ப்பு வெளியான உடனேயே மேல்முறையீடா அல்லது தேர்தலை சந்திப்பதா என்ற குழப்பம் இருந்ததாக சொல்லப்படுகிறது. தினகரன் மேல்முறையீடு செய்யவே விரும்பிய போதும் ஆதரவாளர்களின் நச்சரிப்பு தாங்க முடியாமலேயே தேர்தலை சந்திக்கத் தயார் என அறிவித்ததாக தெரிகிறது.

சசிகலாவை சந்திப்பது ஏன்
எனினும் தனது சகாக்களிடம் சசிகலாவும் இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டையே விரும்புவதாக கூறி வரும் தினகரன், தான் சொல்வது உண்மை தான் என்று மாஜிக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர்களை தன்னுடன் சிறைக்கு அழைத்து செல்வதாக கூறப்படுகிறது.

டிடிவிக்கு டென்ஷன்
சசிகலாவை சந்திக்கப் போகும் மாஜிக்கள் அவரிடம் என்ன சொல்லப்போகிறார்கள். இவர்கள் சொல்லும் விஷயங்களுக்கு சசிகலாவின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்ற டென்ஷனில் தினகரன் இருப்பதாக கூறப்படுகிறது. தனிக்கட்சி வேண்டாம் என்று சசிகலா சொன்னதையும் மீறி தினகரன் கட்சி தொடங்கி தற்போது குடும்பத்தினரிடம் இருந்தும் பிரிந்து இருக்கிறார் இந்நிலையில் சசிகலாவுடனான இவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications