அண்ணாமலை தோற்றதால் மொட்டை அடித்த பாஜக நிர்வாகிக்கு வந்த சோதனை.. வீட்டிற்கு தேடிப்போன வனத்துறை
சென்னை: அண்ணாமலை தோற்றதால் தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியில் பாஜக நிர்வாகி மொட்டை அடித்துக்கொண்டார். இவரது புகைப்படம் வைரலான நிலையில், ஜெயக்குமார் என்ற அந்த பாஜக நிர்வாகியை பிடித்து வனத்துறை போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டனர்.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் அனைத்திலும் தோல்வி அடைந்தன. குறிப்பாக தமிழ பாஜக தலைவர் அண்ணாமலையே தோல்வியை சந்தித்தார்.

கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, 1 லட்சத்து 17 ஆயிரத்து 561 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அண்ணாமலையை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட கணபதி ராஜ்குமார் 5,64,662 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை 4,47,101 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 2,35,313 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 82,273 வாக்குகளும் பெற்றனர்.
கோவையில் பாஜக இந்த முறை தனி வார்ரூம், தனி தேர்தல் அறிக்கை என வியூகம் வகுத்த போதும் சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வியை தழுவி உள்ளார். இந்த தோல்வியால் அண்ணாமலையின் ஆதரவாளர்கள், பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர். அண்ணாமலை தோல்வி அடைய வாய்ப்பே இல்லை என்று உறுதியாக நம்பிய பலரும் உள்ளூரில் உள்ள எதிர்க்கட்சி பிரமுகர்களிடம் சவால் விட்டு இருந்தனர்.
அந்த வகையில்தான், தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியைச் சேர்ந்த பாஜக பிரமுகர், கோவையில் அண்ணாமலை தோத்துட்டா மொட்டை அடித்து மீசையை மழித்து விடுறேன்" என்று மாற்றுக் கட்சி நண்பர்களுடன் பந்தயம் கட்டி உள்ளார். இந்நிலையில் நேற்று அண்ணாமலை தோல்வி அடைந்த தகவலை அடைந்து நடுரோட்டில் மொட்டை அடித்து மீசையை மழித்துக் கொண்டார்.
இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனிடையே அந்த பாஜக நிர்வாகி ஜெயக்குமார் தனது கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியில் புலி நகம் போன்ற டாலர் அணிந்து இருந்தார். இந்த காட்சிகள் வைரல் ஆன நிலையில், வனத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, வனத்துறையினர் ஜெயக்குமாரை தேடிப்பிடித்து விசாரண நடத்தினர்.
அவர் கழுத்தில் அணிந்து இருந்த தங்கச் சங்கிலியில் இருப்பது புலி நகமா என விசாரணை செய்தனர். இதில், 10 வருடங்களுக்கு முன்பாக திருச்செந்தூர் கோவிலில் தெருவோர வியாபாரிகளிடம் வாங்கிய பொருள் என்பதும் புலி நகம் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்து வனத்துறையினர் சென்றனர்.












Click it and Unblock the Notifications