அதிகரித்த அழுத்தம்.. கடும் கோபத்தில் ஹைகோர்ட்.. தூத்துக்குடி எஸ்பி அதிரடி இடமாற்றம்
சென்னை: தூத்துக்குடி எஸ்பியாக பணியாற்றிய அருண் பாலகோபாலன் திடீரென டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் தூத்துக்குடி எஸ்பியாக பணியேற்க உள்ளார்.
சாத்தான்குளம் இரட்டை மரணம் பெரிய விவகாரமாக வெடித்ததுமே எஸ்பி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்களா என்ற கேள்வி எழுந்தது. காரணம், சாத்தான்குளம் போலீஸாரின் செயலால் காவல்துறைக்கு மிகப் பெரிய கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது.ஆனால் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்த விவகாரத்தை மதுரை உயர்நீதிமன்றக் கிளை கையில் எடுத்ததும் முதலில் இரண்டு எஸ்ஐக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஹைகோர்ட் கடும் காட்டம் காட்ட ஆரம்பித்த நிலையில் சாத்தான்குளம் போலீஸாரும் கூண்டோடு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி ஏஎஸ்பி குமாரும், சாத்தான்குளம் டிஎஸ்பி பிரதாபனும் புதிய சர்ச்சையில் சிக்கினர். விசாரணைக்குச் சென்ற மாஜிஸ்திரேட்டைப் பார்த்து உன்னால ஒன்னும் பண்ண முடியாதுடா என்று ஒரு கான்ஸ்டபிள் ஏக வசனத்தில் பேச பெரும் விவகாரமாக இது மாறிப் போனது. இப்போது ஏஎஸ்பியும், டிஎஸ்பியும் காத்திருப்போர் பட்டியலில் மாற்றப்பட்டுள்ளனர். காவலர் மகாராஜன் சஸ்பெண்ட் ஆகியுள்ளார். அவர்கள் மீது மதுரை ஹைகோர்ட் பெஞ்ச் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை போட்டுள்ளது.
இப்படி நாலாபக்கமும் அழுத்தம் அதிகரித்து ஹைகோர்ட் பாய்ச்சல் காட்ட ஆரம்பித்துள்ள நிலையில் இன்று திடீரென தூத்துக்குடி எஸ்பியை அரசு இடமாற்றம் செய்துள்ளது. அவருக்குப் பதில் புதிய எஸ்பியாக விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ரவுடிகள் ஒழிப்பு நடவடிக்கையில் திறம்பட செயல்பட்ட அவர் நாளை தூத்துக்குடி எஸ்பியாக பதவியேற்க வாய்ப்பு இருக்கிறது. பொருளாதார குற்றப்பிரிவில் பணியாற்றிய முருகன் ஐபிஎஸ் தென்மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட மக்களிடம் ஜெயக்குமார் நல்ல மதிப்பைப் பெற்றவர். தூத்துக்குடி மாவட்டத்தில்காவல்துறையின் மீது அடுத்தடுத்து கிளம்பும் புகார்களுக்கு இடையே எஸ்பியாக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளதால் மக்களிடம் காவல்துறைக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தரும் வகையிலும், பொதுமக்களுக்கு காவல்துறை நண்பன் என்ற அளவிலும் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை ஜெயக்குமார் எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மற்றொரு பக்கம் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.