வழக்கு போட்ட பின் விஜய் தரப்பு வழக்கறிஞர் சொன்ன வார்த்தை! தவெகவுக்கு எதிராகவே போக வாய்ப்பு இருக்காம்
சென்னை: கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது நடந்த துயரம் தொடர்பாக ஐகோர்ட் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று மதுரை ஐகோர்ட் வளாகத்தில் விஜய் தவெக தரப்பு வழக்கறிஞர் அறிவழகன் சில கருத்துகளைக் கூறியிருந்தார். ஆனால், அவரது அந்தக் கருத்துகளே தவெக தரப்புக்கு எதிராகப் போய்விடலாம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். இது குறித்து நாம் விரிவாகப்ப் பார்க்கலாம்.
கரூரில் நேற்று முன்தினம் விஜய் பிரச்சாரத்திற்காகச் சென்றார். அப்போது விஜய்யை பார்க்கப் பொதுமக்களும் தொண்டர்களும் அதிகளவில் திரண்டனர். விஜய் வர பல மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டதால் கூட்டம் அளவு கடந்து சென்றுவிட்டது. விஜய் வந்த பிறகு நிலைமை மோசமானது. திடீரென அங்குக் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில், தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

கரூர் துயரம்
இதனால் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தில் இப்போது வரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவிலேயே அரசியல் கூட்டத்தில் நடந்த மிக மோசமான ஒரு நிகழ்வாக இது மாறியது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க ஏற்கனவே ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கரூருக்கு சென்ற அருணா ஜெகதீசன், ஏற்கனவே விசாரணையைத் தொடங்கிவிட்டார்.
இது ஒரு பக்கம் இருக்க நேற்று ஞாயிற்றுக்கிழமையே கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தவெக சார்பில் முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியிடம் தவெக சார்பில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு திங்கள் அதாவது இன்று பிற்பகல் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
முறையீடு
அதன்படி இன்று தவெக தரப்பு வழக்கறிஞர் அறிவழகன் ஐகோர்ட் மதுரை கிளையில் பதிவாளர் ஐயப்பனிடம் இது தொடர்பாக முறையிட்டார். கரூர் பிரச்சாரத்தில் சதித்திட்டம் நடந்ததாகவும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் ஒரே இரவில் உடற்கூறு ஆய்வு நடத்தியதில் சந்தேகம் இருப்பதாகவும் முறையிடப்பட்டது. மேலும், இது குறித்து பொது நல மனு தாக்கல் செய்வதாகவும் அறிவழகன் தெரிவித்தார். இருப்பினும், இதை ஏற்க மறுத்த பதிவாளர், தசரா விடுமுறை முடிந்து வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார்.
விஜய் தரப்பு வழக்கறிஞர்
இதற்கிடையே மதுரை ஐகோர்ட் வளாகத்தில் பேட்டியளித்த தவெக விஜய் தரப்பு வழக்கறிஞர் சில கருத்துகளைக் கூறினார். அதாவது கரூர் பிரச்சாரத்தில் சதி செய்யப்பட்டதாகவும் அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அறிவழகன் தெரிவித்துள்ளார். மேலும், கரூரில் ஆதாரங்களை அழிக்கப் பார்க்கிறார்கள், சிசிடிவி காட்சிகளை அழிக்கப் பார்க்கிறார்கள் என்றும் கூறியிருந்தார். இதன் காரணமாகவே வலிமையான அமைப்பான சிபிஐ இதை விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
அவர் மேலும், "கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் உடல்கள் அனைத்தும் ஒரே இரவில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு அவசரமாகப் பிரேதப் பரிசோதனை செய்தது ஏன்? இதுவே தவறு. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்றார். குறிப்பாக செந்தில் பாலாஜி பற்றி விஜய் பேச ஆரம்பித்தபோதே அவரை நோக்கிச் செருப்பு வீசப்பட்டது என்றும் இதுவும் சதித் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் கூறியிருந்தார்.
தவெகவுக்கு எதிராகவே திரும்பும்
அவரது இந்தக் கருத்துகள் அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதேநேரம் அவரது தரப்பு வழக்கறிஞர் இதுபோல பொதுவெளியில் பேசுவதே கூட அவர்களுக்கு எதிராகத் திரும்பிவிட வாய்ப்பு இருப்பதாகச் சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது ஒரு விஷயம் நீதிமன்றங்களுக்குச் சென்றுவிட்டாலே அது sub judiceஆகி விடும். sub judice என்றால் நீதி விசாரணைக்குக் கீழ் இருக்கிறது என்று அர்த்தம்.
இதுபோல நீதி விசாரணைக்குக் கீழ் இருக்கும் விஷயங்களில் கருத்துக்கள் சொல்லாமல் இருப்பதுதான் சரியானதாக இருக்கும். இதன் காரணமாகவே வழக்கு தொடர்பான கேள்விகளுக்கு அரசியல்வாதிகள் எப்போதும், "நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் கருத்து சொல்ல முடியாது" என சொல்வதை நாம் பார்த்து இருக்கிறோம்.
அடுத்து என்ன
பொதுவெளியில் பேசியே தீர வேண்டும் என்றாலும் கோரிக்கை தொடர்பாக மட்டுமே பேச வேண்டும்.. அரசியல் ரீதியில் கருத்துகளைச் சொன்னால் அது நீதிபதிகளுக்குப் பல நேரங்களில் கோபத்தையே ஏற்படுத்தும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். இதனால் வழக்கறிஞர் அறிவழகனின் கருத்துகள் நீதிமன்றத்தில் எப்படிப் போகப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications