ஆதவ் அர்ஜுனாவின் டெல்லி பயணம்.. தவெகவின் திட்டம் என்ன? அடித்து சொன்ன பத்திரிகையாளர் ப்ரியன்!
சென்னை: தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் டெல்லி பயணம் தொடர்பாக பத்திரிகையாளர் ப்ரியன் கருத்து தெரிவித்துள்ளார். சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டால் அதனை எதிர்கொள்ள பாஜகவின் ஆதரவை பெற ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்று முயற்சிப்பதாக கூறியுள்ள ப்ரியன், திமுக மற்றும் பாஜக எதிர்ப்பில் சமரசம் செய்து கொள்ள தீவிர விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறி இருக்கும் நிலையில், அக்கட்சியின் 2ஆம் கட்டத் தலைவர்களின் செயல்பாடுகள் மேலும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகிவிட்ட நிலையில், ஆதவ் அர்ஜுனாவுக்கு போலீசார் சம்மன் அளித்துள்ளனர்.

காவல்துறை சம்மன் அளித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே ஆதவ் அர்ஜுனா உடனடியாக டெல்லி புறப்பட்டார். தனி விமானத்தில் டெல்லி சென்றுள்ள ஆதவ் அர்ஜுனா, பாஜகவின் முக்கியத் தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. கரூர் விவகாரத்தில் சிக்கியுள்ள தவெக, அதில் இருந்து தப்பிக்க பாஜகவிடம் அடைக்கலம் தேடுவதாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கலவரத்தை தூண்டும் வகையில் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவும் சர்ச்சையாகியது. இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனாவிடன் டெல்லி பயணம் தொடர்பாக பத்திரிகையாளர் ப்ரியன் பேசுகையில், தமிழக அரசு நடவடிக்கையில் இருந்து தப்பிக்க ஆதவ் அர்ஜுனா உடனடியாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். லாட்டரி தொழில் நடத்துவோர் மத்திய அரசுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பார்கள்.
லாட்டரி மார்ட்டின் நிறுவனம் பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிகளவில் டொனேஷன் கொடுத்துள்ளது. டெல்லி மூலமாக விஜய்க்கு ஏதாவது ஆதரவு கிடைக்குமா என்று ஆராயவும் ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றுள்ளார். ஏனென்றால் நீதிமன்றம் ஒருவேளை கரூர் விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டால், அதிலிருந்து விஜய்யை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஆய்வு செய்ய டெல்லி சென்றிருக்கலாம்.
ஆதவ் அர்ஜுனாவின் டெல்லி பயணம் விஜய்யை இந்த விவகாரத்தில் இருந்து காக்கவும், எதிர்காலத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவை பெறுவதும் ஒரு காரணமாக இருக்கலாம். தவெக தலைவர் விஜய்யை பொறுத்தவரை வலிமையாக வருவோம் என்று சொல்லி இருக்கிறார். திமுக எதிர்ப்பு வாக்குகள் மற்றும் பாஜக எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்ய விஜய் முயற்சிக்கிறார்.
கொஞ்சமாக பாஜக பக்கம் சாய்ந்தாலும், பாஜக எதிர்ப்பு வாக்குகளை விஜய்யால் பெறவே முடியாது. இதனால் திமுக மற்றும் பாஜக எதிர்ப்பில் இருந்து விஜய் விலகுவதற்கு வாய்ப்பு கிடையாது. ஒருவேளை சிபிஐ விசாரணை வந்தால், அதில் இருந்து தப்பிக்க பாஜகவிடம் உதவியை நாடலாம் என்று உடனிருப்பவர்கள் கருதுகிறார்கள். ஆனால் விஜய் பாஜகவுடன் எந்த தொடர்பையும் வைக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications