விஜய் போராட்டத்தில்.. பங்கேற்க வந்த தவெகவினர் அதிகாலையில் திடீர் கைது! என்ன காரணம்
சென்னை: விசாரணை என்ற பெயரில் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமார் மரணத்தைக் கண்டித்தும் லாக்கப் மரணங்களுக்கு எதிராகவும் தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று சென்னையில் போராட்டம் நடைபெறுகிறது. இதற்கிடையே இந்தப் போராட்டத்தில் பங்கேற்கப் புறப்பட்ட வேலூர், காஞ்சிபுரம் தவெக தொண்டர்களை நிபந்தனைகளை மீறியதாகச் சொல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திருட்டு புகார் ஒன்றில் கோயில் காவலாளி அஜித் குமாரை போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். எஃப்ஐஆர் கூட பதிவு செய்யாமல் விசாரணை என்ற பெயரில் போலீசார் அவரை அடித்துத் தாக்கியுள்ளனர். மேலும், சித்திரவதையும் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அஜித் குமார் உயிரிழந்தார்.

அஜித் குமார் மரணம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. ஏற்கனவே இந்த வழக்கு முதலில் சிபிசிஐடி வசம் மாற்றப்பட்ட நிலையில், பின்னர் இது சிபிஐ வசம் மாற்றப்பட்டது. இதற்கிடையே அஜித் குமார் மரணத்திற்கு நியாயம் கேட்டும் தொடர்கதையாகி வரும் லாக்கப் மரணங்களைக் கண்டித்தும் தவெக சார்பில் இன்று போராட்டம் நடைபெறுகிறது.
சென்னை சிவானந்தா சாலையில் இன்று தவெக தலைவர் விஜய் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. விஜய் அரசியலுக்கு வந்த அவர் பங்கேற்கும் முதல் போராட்டம் என்பதால் இது கவனம் பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மொத்தமாக 16 நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி அளித்துள்ளனர். பட்டாசு வெடிக்கக் கூடாது, இரு சக்கர வாகனப் பேரணி நடத்தக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர்.
இதற்கிடையே இன்று காலை சென்னையில் நடைபெறும் தவெக போராட்டத்தில் பங்கேற்கப் புறப்பட்ட தொண்டர்கள் திடீரெனக் கைது செய்யப்பட்டனர். வேலூர், காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்ட தவெக தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நிபந்தனைகளை மீறியதாகச் சொல்லி இந்தத் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதாவது சென்னை தவெக தொண்டர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என போலீஸ் நிபந்தனை விதித்திருந்தது. ஆனால், நிபந்தனையை மீறி வெளி மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications