41 பேரை பலி கொண்ட கரூர் நெரிசல்..ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வந்த மதியழகனுக்கு சீட் கொடுத்த தவெக விஜய்
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் சூடு பிடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக மாவட்ட செயலாளர் வி.பி. மதியழகன் அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக கூட்ட நெரிசல் சம்பவ வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னணியுடன் அவர் களம் இறங்குவது, இந்த தொகுதியில் தேர்தல் போட்டியை மேலும் பரபரப்பாக்கும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் இடையே நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது.

இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தி தலைவர் விஜய் சென்னை நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் முழுப் பட்டியலை வெளியிட்டார்.. இந்த பட்டியலில் 200க்கும் மேற்பட்ட புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், கட்சித் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முக்கியமாக கவனம் ஈர்த்தது கரூர் தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பு தான். அங்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளராக உள்ள வி.பி. மதியழகன் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் மதியழகன் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் காவலில் இருந்த பின்னர் ஜாமீனில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்போது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ நடத்தி வருகிறது. கரூர் வழக்கில் ஆதவ் அர்ஜுனா உள்ளிடோரின் பெயர்கள் சேர்க்கப்பட்ட நிலையில், மதியழகன் மற்றும் இன்னொரு நிர்வாகியும் மட்டுமே கைது செய்யப்பட்டனர்.
தற்போது அவரே தேர்தல் களத்தில் போட்டியிடுவதாக விஜய் அறிவித்துள்ளார். கரூர் தொகுதி நீண்ட காலமாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அரசியல் ஆதிக்கம் செலுத்திய பகுதியாக இருந்தந்தது. குறிப்பாக கடந்த தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றதால், இந்த தொகுதி அவரது கோட்டையாகவே பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த முறை செந்தில் பாலாஜி கரூரிலிருந்து மாறி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளார். இதனால் கரூர் தொகுதியில் அதிமுகவுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகம் தனது மாவட்ட செயலாளர் மதியழகனை களம் இறக்கியிருப்பது பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தேர்தலில் நான்கு முக்கிய அரசியல் அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளதால், ஒவ்வொரு தொகுதியிலும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கரூர் போன்ற முக்கிய தொகுதிகளில் புதிய முகங்கள் களம் இறங்குவது தேர்தல் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications