ரோடு ஷோ விதிகள்.. தவெக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு 3 வாரம் அவகாசம் வழங்கிய ஐகோர்ட்
சென்னை: அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ, கூட்டங்களுக்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க 3 வார கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் 'ரோடு ஷோ' போன்ற நிகழ்ச்சிகளுக்கு, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசு, கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு விதிகளை உருவாக்கி அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஐகோர்ட் உத்தரவை ஏற்று, தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டங்களை நடத்தி, வரைவு வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்கியது.
இந்நிலையில், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ, கூட்டங்களுக்கான அரசின் புதிய விதிகள் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் செயல்பாட்டை முடக்கும் வகையில் உள்ளதாகவும், தவெக அளித்த பரிந்துரைகளை அரசு பரிசீலிக்கவில்லை என்றும் சி.டி.ஆர். நிர்மல்குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், ரோடு ஷோக்களை முறைப்படுத்த வெளியிடப்பட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க 3 வாரம் அவகாசம் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் தொடர்ந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications