பாஜக கூட்டணியிடம் ஆதரவு கேட்கவில்லை.. தவெக நிர்மல்குமார் திட்டவட்டம்
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து ஆட்சியமைக்கும் நிலைக்கு வந்துள்ள நிலையில், அரசியல் களத்தில் அடுத்த கட்ட பரபரப்பு தொடங்கியுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை எட்ட பிற கட்சிகளின் ஆதரவு அவசியமான சூழல் தவெகவுக்கு உருவாகியுள்ளது. இந்நிலையில், பெரும்பான்மைக்கு பாஜக கூட்டணியிடம் ஆதரவு கோரவில்லை என்று தவெக நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்டப்பேரவையில், ஆட்சியமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியமைக்க மேலும் 11 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகியுள்ளது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தனது 5 உறுப்பினர்களின் ஆதரவை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் ஆதரவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த மூன்று கட்சிகளுக்கும் தலா 2 உறுப்பினர்கள் உள்ளதால், அவர்களின் முடிவு தமிழக அரசியல் சூழலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்காக தவெக சார்பில் அந்த கட்சிகளுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை எட்ட பிற கட்சிகளின் ஆதரவு அவசியமான சூழல் தவெகவுக்கு உருவாகியுள்ள நிலையில், பெரும்பான்மைக்கு பாஜக கூட்டணியிடம் ஆதரவு கோரவில்லை என்று தவெக நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தவெக நிர்வாகி நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு கட்சிக்கும் பொதுமக்கள் வாக்களித்திருக்கின்றனர். அவர்களும் அவர்கள் கொள்கைகளை நிறைவேற்ற ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கில் இருந்தால்தான் அதனை செய்ய முடியும். விஜய் எங்கள் முதல் மாநாட்டிலேயே ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பதை கூறியிருக்கின்றார். எல்லா கட்சிகளும் அவர்களுடைய கொள்கைகளை, மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கில் இருந்து தான் செய்ய முடியும். அதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இருக்காது.
தவெகவுக்கு எந்தவொரு நெருக்கடியும் இல்லை. ஒன்றரை கோடி மக்கள் தவெகவுக்கு வாக்களித்திருக்கின்றனர். ஒட்டுமொத்த தமிழ் மக்களும் விஜய் முதல்வராக வேண்டும் என்று வாக்களித்திருக்கின்றனர். இப்படி ஒரு தேர்தலை யாருமே பார்க்காத தேர்தலாக இருக்கும் என்று கடந்த ஒரு வருடமாக சொல்லிக் கொண்டிருந்தோம். மக்கள் திருவிழா போல வந்து வாக்களித்தனர்.
மாற்றத்தை விரும்பி மக்கள் வாக்களித்தனர். மக்கள் என்ன நினைத்து வாக்களித்தார்களோ அது 100 சதவீதம் நிறைவேற்றப்படும். விஜய் முதல்வராவதை மொத்த தமிழ்நாடும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு வேண்டாம் என்றதும் தலைவர் விஜய் தான். இதனால், பொதுமக்களுக்கு தேவையில்லாத இடையூறு ஏற்படும் என்பதால் போலீஸ், எஸ்காட் போன்றவற்றை விஜய் தான் வேண்டாம் என்று கூறியிருந்தார்.
ஆளுநரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. காத்திருந்து பார்க்கலாம். சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ, அதனை ஆளுநர் செய்வார். இல்லையெனில் அதற்கடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக கூட்டணியிடம் ஆதரவ கோரவில்லை. முஸ்லிம் லீக் ஆதரவும் கேட்டுள்ளோம். விசிக, கம்யூனிஸ்டுகள் ஆதரவை கோரியுள்ளோம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications