இங்கேயும் வந்தாச்சா! இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் ஊடே! கேமரா முன் தவெக தொண்டரின் செயல்
சென்னை: இலங்கையில் நடந்த இந்தியா- பாகிஸ்தான் போட்டியின்போது தவெக கொடியை இளைஞர் ஒருவர் காண்பித்தது வைரலாகி வருகிறது. உலகக் கோப்பை போட்டிகள் நடக்கும் மைதானங்களில் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தவெக கொடியுடன் இவர் எப்படி வந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கையில் நடந்த டி20 உலகக் கோப்பையின் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில், இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் சாதனைகளும் படைக்கப்பட்டன.

பாகிஸ்தான் அணி, இன்னிங்ஸில் 18 ஓவர்களை சுழற்பந்து வீச்சாளர்களையே பயன்படுத்தியது. இது உலகக் கோப்பையில் ஓர் இன்னிங்ஸில் அதிக சுழல் ஓவர்கள் வீசிய சாதனையை சமன் செய்தது. 2012 உலகக் கோப்பை பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா ஆட்டத்திலும் 18 சுழல் ஓவர்கள் வீசப்பட்டிருந்தன.
பாகிஸ்தானின் புதிய சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக், 4 ஓவரில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். பந்துவீச்சில் 2 பவுண்டரிகள் மட்டுமே எடுக்கப்பட்டன.
இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா, நடப்பு உலகக் கோப்பையின் இரு ஆட்டங்களிலும் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்துள்ளார்.
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா, இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் மிதுன் மன்ஹாஸ், துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொசின் நக்வி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் இப்போட்டியை கண்டுகளித்தனர்.
2024 டி20 உலகக் கோப்பையை இந்தியாவிற்கு வென்ற கேப்டன் ரோகித் சர்மா, போட்டியைக் காண கொழும்பு வந்திருந்தார். ஆட்டத்திற்கு முன் இந்திய வீரர்களுக்கு அவர் ஆலோசனைகள் வழங்கினார்.
இவ்வெற்றியில், டி20 உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தானை 9 முறை எதிர்த்து, 8 முறை வென்றுள்ளது. குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளைப் பெற்ற பெருமையையும் இந்தியா பெற்றது.
இத்தனை சுவாரஸ்யங்கள் நடந்துள்ள நிலையில் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு சர்ச்சை சம்பவமும் நடந்துள்ளது. அதாவது இந்தியா- பாகிஸ்தான் இடையே நடந்த போட்டியின் போது தவெக தொண்டர் ஒருவர் தவெக கொடியை பறக்க விட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
உலக கோப்பை போட்டிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவும் நிலையில் அந்த நபர் எப்படி இந்த கொடியை கொண்டு வந்தார் என தெரியவில்லை. கடந்த ஆண்டு இறுதியில் மலேசியாவில் நடந்த ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் தவெகவின் கொடி, சின்னம் உள்ளிட்டவைகளை கொண்டு வரக் கூடாது என மலேசிய அரசு விதிகளை வகுத்தது.
அப்படியும் ஒருநபர் அங்கு தவெக கொடியை காட்டினார். பின்னர் அவரை மலேசிய போலீஸ் கைது செய்து எச்சரித்தது. அது போல் தவெக கட்சிக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் விசிலை கொண்டு வர தடை விதிக்கப்பட்டது.
பொதுவாக, தமிழகம் முழுவதுமே தூய்மைப் பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று விசில் ஒலி எழுப்புவர். அந்த சத்தத்தை கேட்டதும், வீட்டில் உள்ளவர்கள் குப்பையை எடுத்து வந்து தூய்மைப் பணியாளர்களிடம் கொடுப்பார்கள்.
அந்த வகையில், சிவகங்கை நகராட்சியின் 21வது வார்டில் தூய்மைப் பணியாளர்கள் வழக்கம் போல விசில் அடித்தபடி குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அந்த வார்டு கவுன்சிலர் அயூப் கான், தூய்மைப் பணியாளரின் விசிலை வாங்கி அதை குப்பையில் போட்டார்.
பின்னர், குப்பை சேகரிப்பு குரலை எழுப்பும் ஸ்பீக்கரை அவரிடம் அயூப் கான் கொடுத்தார். "இனி எனது வார்டில் விசில் அடித்து குப்பையை சேகரிக்கக் கூடாது. அதற்கு பதில் ஸ்பீக்கரை பயன்படுத்த வேண்டும்" எனக் கூறினார். இப்படி தவெகவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications