ஸ்டாலினின் ஒரு நேர்காணல்.. அடித்து தூக்கிய திமுக பிரச்சாரம்.. மிகப்பெரிய வாய்ப்பை கோட்டைவிட்ட விஜய்!
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில், கட்சிகளின் இறுதிக்கட்ட பிரச்சாரம் உச்சத்தில் இருக்கிறது. ஆனால் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கான பல்வேறு சாதகங்களை கோட்டைவிட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக ஒரு நேர்காணல் கூட விஜய் கொடுக்காதது தவெகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒருநாள் மட்டும் இருக்கும் நிலையில், திமுக, அதிமுக, தவெக மற்றும் நாதக உள்ளிட்ட கட்சியினரின் பிரச்சாரம் உச்சத்தில் இருக்கிறது. கடைசி நொடியில் கூட இன்னும் சிலரிடம் வாக்கு சேகரிக்க வேண்டும் என்ற முனைப்புடன் வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். அதேபோல் திமுகவினர் ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி டிஜிட்டலில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

டிஜிட்டல் பிரச்சாரங்கள் மூலமாக இளம் தலைமுறையினரை எளிதாக தங்கள் பக்கம் கொண்டு வர முடியும். அதேபோல் அவர்களிடம் நேரடியாக அந்தந்த கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியை கொண்டு செல்ல முடியும். இன்றைய காலத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக செய்யப்படும் பிரச்சாரங்கள் சாமானிய மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
அதேபோல் கட்சித் தலைவர்களின் முக்கிய பேச்சுகள், நேர்காணல்கள் உள்ளிட்டவற்றை ரீல்ஸாக வெளியிட்டு கட்சியினர் பகிர்ந்து வருகின்றனர். இப்படியான டிஜிட்டல் பிரச்சாரத்தில் தவெக பின் தங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது. தவெகவின் கொள்கைகள், தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கலாம். ஆனால் வேட்பாளர்களே அதில் பின் தங்கி இருக்கின்றனர்.
அதேபோல் தவெக தலைவர் விஜய் முக்கியமான பிரச்சார வடிவத்தை தவிர்த்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. அது என்னவென்றால், நேர்காணல் தான். அண்மையில் தனியார் தொலைக்காட்சியில் ஸ்டாலினின் நேர்காணல் வெளியாகி திமுகவினர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தாலும், இந்த வீடியோக்களை சோசியல் மீடியாவில் திமுகவினர் பகிர்வதை தடுக்க முடியாது.
இப்படியொரு வாய்ப்பை விஜய் இழந்துவிட்டார். தவெகவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலுக்கு கூட விஜய் ஒரு நேர்காணல் அளித்திருக்கலாம். அரசியல் வருகை தொடங்கி மக்களுக்கான திட்டங்களை வரை விஜய் நேரடியாக பேசி இருந்தால், அந்த நேர்காணல் பட்டி தொட்டியெங்கும் சென்றிருக்கும். அந்த நேர்காணலிலேயே திமுக மற்றும் பாஜக மீதான விமர்சனங்களை முன் வைத்திருக்கலாம்.
இதனால் விஜய் தனக்கு முன் இருந்த மிகப்பெரிய வாய்ப்பை இழந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்தே விஜய் இதுவரை செய்தியாளர்களை சந்திக்கவில்லை. சில ஆங்கில மீடியாக்கள் விஜய்யை சந்தித்த போதும் கூட, ஆஃப் கேமராவில் தான் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications