விஜய் ஜாதி அரசியல் செய்கிறார்? நெல்லை கவின் ஆணவக்கொலை பற்றி வாய் திறக்கலயே.. இது முக்கியமான பாயிண்ட்
சென்னை: தவெக தலைவர் விஜய், சாதி ரீதியான பலன்களை மனதில் வைத்து அரசியல் செய்வதாக குற்றம்சாட்டப்படுகிறது. பரந்தூர் விமான நிலையம், அண்ணா பல்கலை விவகாரம், அஜித்குமார் கஸ்டடி மரணம் ஆகிய விவகாரங்களில் தீவிரமாக களமாடிய விஜய், ஆணவப் படுகொலை தொடர்பாக வாய் திறக்காமல் சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக விமர்சிக்கப்படுகிறது.
சமீபத்தில் நடந்த அஜித் குமார் லாக் அப் மணரத்தில் தவெக தலைவர் விஜய் எடுத்த முன்னெடுப்புகள் மிகவும் கவனிக்கப்பட்டது. நேரடியாகவே பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் சொன்னார். கட்சி சார்பிலும் உடனடியாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு இடையில்தான் கடந்த ஜூலை 20 ஆம் தேதி நெல்லையில் கவின் என்ற ஐ.டி ஊழியர் சுர்ஜித் என்ற இளைஞரால் ஆவணப்படுகொலை செய்யப்பட்டார்.

நெல்லை ஆணவக்கொலை
நெல்லையில் நடந்த இந்த ஆணவக் கொலைச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் பலியான கவின், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுபாஷினியை கவின் காதலித்து வந்தார்.
வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த இவர்களின் காதல், பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நீடித்தது. கவினைச் சந்திக்க அழைத்த சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித், அவரை அரிவாளால் வெட்டிக் கொன்றார்.
குற்றவாளியான சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சுர்ஜித்தின் பெற்றோர்கள் இருவரும் கைது செய்யப்படும் வரை கவின் உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து அவரது குடும்பத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களின் கோரிக்கையை ஏற்று, சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார். ஆணவக் கொலையைக் கண்டித்து கம்யூனிஸ்ட் மற்றும் விசிக போன்ற கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். ஆணவக் கொலைகளுக்கு எதிராகச் சிறப்புச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.
விஜய் வாய்திறக்கவில்லை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். கவினின் மரணம் மிகப்பெரிய இழப்பு என்று குறிப்பிட்டு அவர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். நெல்லை கவின் ஆணவக்கொலை விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாய் திறக்காதது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது.
அம்பேத்கரையும், பெரியாரையும் தனது கொள்கை வழிகாட்டிகள் என சொல்லிக்கொள்ளும் விஜய் கவின் சாதிய ஆணவப்படுகொலைக்கு ஒரு துண்டு அறிக்கை கூட விடவில்லை என்பது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆணவப் படுகொலை பற்றி பேசினால் தென் மாவட்டங்களில் வாக்குகள் கிடைக்காது என்பதற்காக, விஜய் இதுபற்றி வாய் திறக்காமல் தவிர்த்துவிட்டதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
மாநாட்டிலும் விஜய் பேசவில்லை
பரந்தூர் விமான நிலையம், அண்ணா பல்கலை விவகாரம், டாஸ்மாக் ஊழல், என அனைத்திலும் தமிழக வெற்றிக்கழகம் முழு வீச்சில் செயல்பட்டது. அஜித் குமார் கஸ்டடி மரணத்துக்கு எதிராக வெகுண்டெழுந்து போராட்டம் நடத்திய விஜய் ஆணவப் படுகொலைக்கு மவுனம் காத்ததில் உள்நோக்கம் இருப்பதாக விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. சாதிய ஆணவப் படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்காமல் இருப்பதா என்ற விமர்சனங்கள் எழுகின்றன.
தவெக மதுரை மாநாட்டில் நெல்லை கவின் ஆணவப்படுகொலைக்கு எதிராக தீர்மானம் போடப்பட்டது. ஆனால், மாநாட்டில் தீர்மானத்தை வாசிக்காமல் கொள்ளைப்புற வழியாக வெளியிட்டனர். மாநாட்டில் ஆணவப்படுகொலை பற்றி விஜய் பேசினால் அது பேசுபொருள் ஆகும். சுர்ஜித் சார்ந்த வாக்குகள் விஜய்க்கு கிடைக்காமல் போகும் என்பதால் அதில் அமைதி காத்தார். அப்பட்டமாக சாதி அரசியல் செய்கிறார் விஜய் என குற்றம்சாட்டப்படுகிறது.












Click it and Unblock the Notifications