மீண்டும் தள்ளிப்போகும் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம்.. பிப்ரவரி இறுதியில் வேலூர் செல்லும் விஜய்
சென்னை: தவெக தலைவர் விஜய்யின் வேலூர் மக்கள் சந்திப்பு கூட்டம் பிப்ரவரி 2வது வாரத்தில் நடக்கவிருந்த நிலையில், அந்த கூட்டம் பிப்ரவரி இறுதி வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூர் அடுத்துள்ள அகரம்சேரியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி, பிரமாண்ட மைதானத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் விஜய். இந்நிலையில், விஜய்யின் சுற்றுப்பயணம் தள்ளிப்போவது தவெக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. தேர்தலை கருத்தில் கொண்டு தற்போதே அனைத்துக் கட்சியினரும் தங்களது பிரச்சார வியூகத்தை அமைத்து களத்தில் குதித்து வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பல்வேறு ஊர்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய் கரூரில் நடத்திய பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அதன் பிறகு கூட்டங்கள் எதிலும் பங்கேற்காமல் இருந்த அவர், கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி புதுச்சேரியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். கரூர் சம்பவத்துக்கு பின் தமிழ்நாட்டில் முதல் முறையாக ஈரோடு மாவட்டம், பெருந்துறை விஜயமங்கலம் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் பிரச்சார பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தார் விஜய். பிப்ரவரி 2வது வாரத்தில் இந்த மக்கள் சந்திப்பை நடத்த விஜய் திட்டமிட்டார். பள்ளிகொண்டா அடுத்த சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒடுகத்தூர் செல்லும் சாலையில் அகரம்சேரி எனும் இடத்தில் எட்டு பேருக்கு சொந்தமான சுமார் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தினை தவெக கட்சியினர் தேர்வு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இந்நிலையில் விஜய்யின் வேலூர் மக்கள் சந்திப்பு கூட்டம் பிப்ரவரி 2வது வாரத்தில் நடக்கவிருந்த நிலையில், பிப்ரவரி இறுதி வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 25,000 பேர் கலந்துகொள்ளும் வகையில் நடக்கும் மக்கள் சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மக்கள் சந்திப்பு நடைபெறும் மைதானத்தைச் சமன்படுத்தும் பணியில் தவெக-வினர் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications