பஞ்சாயத்தே வேணாம்.. பொட்டை அழித்த தவெக தலைவர் விஜய்! சனிக்கிழமை அதுவுமா நிகழ்ந்த மாற்றம்! என்னாச்சு?
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தனது எக்ஸ் தள பக்கத்தில் முகப்பு புகைப்படத்தை மாற்றி இருக்கிறார். ஏற்கனவே நெற்றியில் பொட்டுடன் காட்சி அளித்த அவர் தற்போது அதனை அழித்துவிட்டு கையெடுத்து கும்பிடும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். விநாயகர் சதுர்த்தி-ஓணம் வாழ்த்து, பெரியாருக்கு மரியாதை என விஜய் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது பொட்டு வைத்த புகைப்படம் மாற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் குதிக்க விஜய் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில் பல சர்ச்சைகளையும் அவர் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. குறிப்பாக கட்சியின் பெயர் அறிவித்தது தொடங்கி அவரை விமர்சனக் கணைகள் சூழ்ந்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்ட போதும் பல சர்ச்சைகளை சந்திக்க வேண்டி இருந்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னத்தை விஜய் பயன்படுத்தி இருப்பதாக அக்கட்சியின் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் தங்கள் அமைப்பின் கொடியை பயன்படுத்துவதாக சில சாதி அமைப்புகள் விஜய்க்கு எதிராக பேசின. இது ஒருபுறம் இருக்க மாநாடு தொடர்பாகவும் விஜய் பல பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகிறார். பல இடங்களில் இடம் பார்த்து மாநாட்டுக்கான சரியான இடம் அமையாத நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் மாநாடு நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் 27ஆம் தேதி மாநாடு நடக்கும் என விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்ன விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என பாஜக தலைவர்கள் விமர்சனக் கணைகளை தொடுத்தனர். இது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், எச்.ராஜா உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். ஏற்கனவே அரசியலில் தடம் பதித்து இருக்கும் திமுகவின் ஜெராக்ஸ் காபி போல விஜய் செயல்படுவதாக விமர்சனம் முன் வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பெரிய அளவில் நிர்வாகிகள் யாருக்கும் அழைப்பு விடுக்காமல் பொதுச்செயலாளர் ஆனந்த் உடன் பெரியார் திடலுக்கு வந்த விஜய் தானே மலர் தட்டையும் மாலையையும் ஏந்தி வந்து மரியாதை செலுத்தினார். இதற்கும் பாஜக தனது விமர்சனத்தை முன் வைத்தது. அதே நேரத்தில் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து பல சர்ச்சைகள் தன்னைச் சுற்றி எழுந்தாலும் அதனை பற்றி கவலைப்படாமல் தனது அரசியல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்க மும்முரமாக செயல்பட்டு வருகிறார் விஜய். இந்த நிலையில் சனிக்கிழமையான இன்று தனது எக்ஸ் பக்கத்தில் முகப்பு புகைப்படத்தை விஜய் மாற்றி இருக்கிறார். ஏற்கனவே நெற்றியில் பொட்டுடன் சிரித்த முகத்துடன் விஜய் இருக்கும் புகைப்படங்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் மாநாடு தொடர்பான அறிவிப்பின் போது லெட்டர் பேடில் பொட்டு வைத்திருந்த விஜய்யின் முகம் மாற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது எக்ஸ் பக்கத்திலும் முகப்பு படம் மாற்றப்பட்டிருக்கிறது அதில் நெற்றியில் பொட்டு இல்லாமல் வணக்கம் வைத்தது போலும், பின்னணியில் தமிழ்நாடும், விஜய்யின் கட்சிக் கொடியும் இடம் பெற்றிருக்கிறது. இதன் மூலம் திராவிட அரசியலை விஜய் நிச்சயம் பின்பற்றுவார் எனவும், அதன் பொருட்டே நெற்றியில் பொட்டு இல்லாமல் புகைப்படத்தை பதிவிட்டு இருப்பதாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்..












Click it and Unblock the Notifications