தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம்
சென்னை: தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினரே. அப்போது அந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டவர் யார்? காவல் துறை யார் கையில் இருந்தது? யாருக்கும் தெரியாமல் யாருடைய உத்தரவும் இல்லாமலே அவ்வளவு பெரிய துப்பாக்கிச் சூடு நடந்ததா? அப்போது முகத்தை மூடித் தூங்கியவர், முதல்வராக இருந்தாரா? என்று தமிழக வெற்றிக்கழகம் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளது.
தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினரே. அப்போது அந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டவர் யார்? காவல் துறை யார் கையில் இருந்தது? யாருக்கும் தெரியாமல் யாருடைய உத்தரவும் இல்லாமலே அவ்வளவு பெரிய துப்பாக்கிச் சூடு நடந்ததா? அப்போது முகத்தை மூடித் தூங்கியவர், முதல்வராக இருந்தாரா?

தமிழகமே அதிர்ந்து அலறிய அவ்வளவு பெரிய சம்பவத்தை டிவி பார்த்துத் தெரிந்துகொண்டதாக அப்போது சொன்னவர் யார்? தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்று முதல்வர் பதவியைத் தட்டிச் சென்றவர்தான் அவர் என்பது தமிழகம் அறியாததா?
எம்.ஜி.ஆரின் மக்கள் சக்தியை, ஜெயலலிதா அம்மையாரின் கட்டுப்பாடான தொண்டர்கள் கொண்ட சக்தியை யாரிடமோ அடகு வைத்து, மற்றும் பலர் கட்சியாக்கியவர், தீய சக்தி தி.மு.க.வுடன் சேர்ந்து தீர்ந்துபோன சக்தியாக்கியவர், உள்நோக்கத்துடன் விஷம் கக்குவதைத் தமிழக மக்கள் அறியாதவர்களா என்ன?
மக்கள் பாதிப்பைத் தன் பாதிப்பாக உணரும், மக்கள் விரும்பும் முதல்வரைத் தமிழகம் பெற்றுள்ளது. மக்கள் மீது அக்கறை கொண்டதால்தான் உடனடி நடவடிக்கையில் காவல் துறையை ஈடுபடச் செய்கிறார். சட்டம் ஒழுங்கைக் கட்டிக் காக்க, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபற்றி எதையும் அறிந்துகொள்ளாத மிஸ்டர் தீர்ந்துபோன சக்தி, அறியாமையில் அறிக்கை விட்டுக் கூவினால் எப்படி?
கட்சியைக் கலகலக்க வைத்து, அடகு வைத்துக் கரைத்து, அகில உலக அரசியல் கோர்ஸான கட்சியைக் காணாமல் போகச் செய்யும் கோர்ஸ் படித்தவர், அரசியல் பாடம் எடுத்தால் எப்படி?
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்துத் தெரிந்துகொண்ட, தீர்ந்துபோன இந்தச் சக்தி, இப்போது டிவிகூட பார்க்காமல், தூர்ந்துபோன சக்தியுடன் ஆட்சி அமைக்கத் திருட்டுத்தனமாகக் கூட்டணி போட்டது போல, அவர்கள் எழுதிக் கொடுத்த அறிக்கையையும் தவழ்ந்துபோய்ப் பெற்று வந்து தன் பெயரில் வெளியிடுகிறாரா?
பெண்கள் பாதுகாப்பிலும், போதைப் பொருள் தடுப்பிலும், சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் மனசாட்சி உள்ள மக்களாட்சியான எங்கள் வெற்றித் தலைவரின் ஆட்சி, தவறு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்கும். மக்களுக்காகவே உழைக்கும்" தவெக தலைமை கழகம் கூறியிருந்தது.
எடப்பாடி பழனிசாமி அறிக்கை
முன்னதாக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த பதிவில், "சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா? இது தான் மாற்றமா? இந்த லட்சணத்தில், நேற்று திருச்சியில் பேசிய இன்றைய முதல்வர், தன் மீது வீண் பழி போடுவதாக வேறு ஆதங்கப் படுகிறார். இவர் அதிகாரிகளை நியமித்துவிட்டாராம். நியமித்தால் போதுமா? இதே அதிகாரிகள் தானே எல்லா ஆட்சியிலும் பணி புரிகிறார்கள்? மாற்றம் என்பது ஆட்சியாளரிடம் வர வேண்டும்.
காவல்துறையை கையில் வைத்திருப்பவர், சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்காமல் நழுவ முயல்வது வெட்கக்கேடு! இதில், போதைப்பொருளை தன்னால் ஒழிக்க முடியாது என்று மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலம் வேறு அளித்துள்ளார்.
மேலும், சிங்கப்பெண் அதிரடிப் படையை அடுத்த வாரம் துவக்கி வைப்பாராம்.. கடந்த வாரம் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், எதற்கு நீங்கள் கடைசி நிமிடத்தில் ரத்து செய்தீர்கள்? உங்கள் உதவியாளர் வீட்டு விழாவை சிறப்பிக்க தமிழகப் பெண்களின் பாதுகாப்பை Compromise செய்தீர்களா? நீங்கள் அடுத்த வாரம் துவக்கும் வரை தமிழகப் பெண்கள் பாதுகாப்பு இன்றி இருக்க வேண்டுமா?
"ஆட்சி நடத்துவது எப்படி" என நீங்கள் ஆறு மாத Crash Course முடிப்பதற்குள் மக்கள் மடிந்துக் கொண்டே இருக்க வேண்டுமா? அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா? ஒரு முறையான முதல்வராக இல்லாவிடினும், ஒரு கட்சித் தலைவராகவாவது முறையாக உள்ளாரா என்றால், அதுவும் இல்லை!
தூத்துக்குடி அருகே கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. கடந்த 3 வாரங்களில் எத்தனை ஆளுங்கட்சி நிர்வாகிகள் கொடும் குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு உள்ளார்கள்? ஒரு கட்சித் தலைவராக, தன் கட்சியினரை அடக்கி வைக்க வக்கில்லாதவர், எப்படி காவல்துறையை நிர்வகிப்பார்? இப்படிப்பட்ட ஆட்சி எப்படி மக்களைக் காக்கும்? எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்?
தான் வசிக்கும் பொறுப்பின் தன்மை உணராமல், இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே தன்னை பாவித்துக் கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர், அந்த மாய உலகில் இருந்து வெளியே வந்து, தான் வகிக்கும் பொறுப்பின் தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காக்கும் Responsibility எடுத்து, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்" இவ்வாறு கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications