“தவெக தொண்டர்கள் அடாவடி.. எதுவும் தெரியாதுனு சொல்வீங்களா?” நாமக்கல் மா.செவிடம் கடுமை காட்டிய நீதிபதி
சென்னை: தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் முன் ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கூட்டத்தில் தவெக கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் எதுவும் தெரியாது என மாவட்ட செயலாளர் எப்படி கூறலாம்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தவெக தலைவர் விஜய், கடந்த 27 ஆம் தேதி நாமக்கல்லில் பிரச்சாரம் செய்தார். அப்போது நாமக்கல்லில் தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக, தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலையில், முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் சதீஷ் முறையிட்டார். அந்த மனுவில், தாம் எந்த குற்றமும் செய்யவில்லை அரசியல் காரணங்களுக்காக என்னையும் வழக்கில் சேர்த்து விட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்தேன் என்பதற்காக வழக்கு போட்டுள்ளனர். போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரவும், கோர்ட் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கவும் தயாராக இருக்கிறேன். முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ், அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுவதாக செய்வதாக கூறி பிரசாரத்துக்கு மனுதாரர் அனுமதி பெற்றார். அவரது கட்சியினரின் செயல்பாடுகளால் 5 லட்சம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பொதுச் சொத்துகளும் நாசப்படுத்தப்பட்டு உள்ளன . இது தொடர்பாக மனுதாரர் மீது மேலும் 8 வழக்குகள் பதியப்பட்டுள்ளது என வாதங்களை வைத்தார்.
மேலும், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்ள் ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி செந்தில்குமார், கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், தமக்கு எதுவும் தெரியாது என்று மனுதாரர் எப்படி சொல்லலாம்? எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா? எனவும் சதீஷ் குமாரை நீதிபதி கேள்வி எழுப்பினார். அத்துடன் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த விவகாரத்தில், தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் மதியழகன் மற்றும் மற்றொரு நிர்வாகி மாசி பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனிடையே முன்ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. தவெக தலைவர் விஜய்யை வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியிருந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை நீதிபதி ஜோதிராமன் உத்தரவிட்டார். புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் இருவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் தீவிரமாக தேடி வருகின்றன.












Click it and Unblock the Notifications