இதெல்லாம் அராஜகம்.. தவெகவினர் கைதால் டென்ஷன் ஆன விஜய்! தமிழக அரசிடம் வைத்த டிமாண்ட்
சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்கள் பாதுகாப்பினை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினரை உடனே விடுவிக்கும் படி தமிழக அரசுக்கு விஜய் வலியுறுத்தி உள்ளார். அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், தமிழக மக்கள் தங்கள் தேவைக்காக கூட போராட்டம் நடத்தக்கூடாது என்ற அராஜகத்துடன் தமிழக அரசு கைது செய்கிறது என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பினை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள், பெண்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சில இடங்களில் முறையான அனுமதி பெறாமல் போராட்டம் செய்ததாக தவெகவினர் கைது செய்யப்பட்டனர்.

குறிப்பாக தர்மபுரியில் போராட்டத்துக்காக மேடை அமைக்கும் பணி நடந்து வந்தது. இதற்காக போலீசிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இதையடுத்து மேடையை போலீசார் அகற்றினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தவெகவினர் கைதுக்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தங்களுக்கான உரிமை கிடைக்காத பட்சத்தில் அதை வலியுறுத்திக் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் தமிழ்நாட்டுப் பெண்கள் இருக்கின்றனர் என்றும், அறவழியில் போராட்டம் நடத்தகூட விடாமல் கைது செய்வது அராஜகம் என்றும் விஜய் கூறியுள்ளார். இது தொடர்பாக விஜய் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியும் வரும் நிலையில், அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது. பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, உலக மகளிர் தினமான இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கழக மகளிர் அணியினர் மற்றும் தோழர்கள் அறவழியில் அடையாளப் போராட்டத்தை நடத்தினர்.
தங்களுக்கான உரிமை கிடைக்காத பட்சத்தில் அதை வலியுறுத்திக் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் தமிழ்நாட்டுப் பெண்கள் இருப்பதால்தான் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இந்த அறவழி அடையாளப் போராட்டமானது நடைபெற்றது. ஆனால் தமிழக மக்கள் தங்களின் தேவைகளுக்காகக் கூட போராட்டத்தை நடத்தக் கூடாது என்ற அராஜகப் போக்குடன் தமிழக அரசு, கழக மகளிர் மற்றும் தோழர்களைக் கைது செய்திருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தோழர்களையும் மகளிரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications