தவெக "கர்ப்பிணி" பல்லவி ஆடிய ருத்ரதாண்டவம்.. சென்னை திருவிக நகரில் திமுகவை வீழ்த்தி 22,333 ஓட்டு
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் மாபெரும் திருப்பமாக, திரு.வி.க நகர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட எம்.ஆர். பல்லவி 22,333 வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.எஸ். ராமச்சந்திரனை வீழ்த்திய பல்லவி, 8 மாத நிறைமாத கர்ப்பிணியாகத் தேர்தல் களத்தில் நின்றவர்.. தமிழக வெற்றி கழகத்தின் முதல் சட்டமன்றப் பிரவேசமாக அமைந்துள்ள இந்த வெற்றி, சென்னை அரசியல் களத்தில் தி.மு.க-வின் கோட்டையைத் தகர்த்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் இன்று வெளியாகி ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் அதிர வைத்துள்ளன. இதில் குறிப்பாக, சென்னை திரு.வி.க நகர் (தனி) தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பாகப் போட்டியிட்ட எம்.ஆர். பல்லவி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.எஸ். ராமச்சந்திரனை 22,333 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

8 மாத கர்ப்பிணி
8 மாத நிறைமாத கர்ப்பிணியாகத் தேர்தல் களத்தில் நின்ற பல்லவியின் இந்த வெற்றி, தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரு தனித்துவமான பதிவாக மாறியுள்ளது. அத்துடன் டெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளராக களம் கண்ட குடும்ப தலைவி ராக்கி பிர்லாவின் வெற்றியுடன் ஒப்பிடும் வகையில் அமைந்துள்ளதாக சொல்கிறார்கள்.
கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திரு.வி.க நகர் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவியது. ஒருபுறம் ஆளுங்கட்சியான தி.மு.க-வின் கே.எஸ். ராமச்சந்திரன், மறுபுறம் அதிமுக, இன்னொரு புறம் நடிகர் விஜய் தொடங்கிய தவெக வேட்பாளர் எம்.ஆர். பல்லவி என களம் அனல் பறந்தது.
36 வயதான பல்லவி
36 வயதான பல்லவி, தனது கர்ப்ப கால உடல் சவால்களையும் பொருட்படுத்தாமல் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். பல இடங்களில் பிரசாரத்தின் போது அவர் சோர்வடைந்தாலும், மக்கள் கொடுத்த வரவேற்பு அவரைத் தொடர்ந்து இயங்க வைத்தது.
நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றிலிருந்தே பல்லவி முன்னிலை வகித்து வந்தார். ஒவ்வொரு சுற்றிலும் தி.மு.க வேட்பாளரை விட ஆயிரக்கணக்கான வாக்குகளை அவர் கூடுதலாகப் பெற்று வந்தார். இறுதிச் சுற்றின் முடிவில், எம்.ஆர். பல்லவி 22,333 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
திருவிக நகர் தவெக வேட்பாளர்
தமிழக வெற்றி கழகம் சார்பில் சட்டமன்றத்திற்குச் செல்லும் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இவர் உருவெடுத்துள்ளார்.
கர்ப்பிணியான பல்லவி வீதி வீதியாக வந்து வாக்கு கேட்ட போது, பல தாய்மார்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாக பார்த்துள்ளார்கள்.. ஒருமுறை பிரச்சாரத்துக்கு சென்றபோது பல்லவி மயக்கமடைந்து விட்டாராம்.. பிறகு சிகிச்சை எடுத்துக் கொண்டு மறுபடியும் பிரசாரத்திற்கு சென்றுள்ளார். இப்போது எம்.ஆர்.பல்லவி வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வாகியுள்ள நிலையில், அவருக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது..
திமுக கோட்டையை தகர்த்த பல்லவி
மே 20-ந்தேதியையொட்டி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட வேண்டும் என டாக்டர்கள் சொல்லியிருப்பதால், தற்போது ஓய்வில் உள்ளாராம். அதனால்தான் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களை சந்திக்க முடியவில்லையாம். திரு.வி.க நகர் தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வுகாணும் மக்கள் பிரதிநிதியாக பல்லவி செயல்படுவார்" என்று பல்லவியின் கணவர் தெரிவித்துள்ளார்.
பல்லவியின் இந்த வெற்றி, சென்னையின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றான திரு.வி.க நகரில் தி.மு.க-வின் கோட்டையைத் தகர்த்துள்ளது. பட்டதாரி பெண்ணான பல்லவி, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும், முதல் தேர்தலிலேயே மிக வலுவான ஆளுங்கட்சி வேட்பாளரைத் தோற்கடித்திருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது...!!












Click it and Unblock the Notifications