தவெக நிர்வாகிகள் குஷி.. 5ஆம் கட்டமாக மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து விஜய் வாழ்த்து!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஏற்கனவே 4 கட்டங்களாக மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது 5வது கட்டமாக பல்வேறு மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் விஜய் பேசியது அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியது.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வரும் 2026 சட்டசபை தேர்தலில் களம் காண இருக்கிறது. தவெக தலைவர் விஜய் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கு முன்பாக, கட்சியின் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கவனம் செலுத்தும் வகையில், கட்சியின் நிர்வாக வசதிக்காக, 120 கட்சி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முதல் கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் 19 மாவட்டச் செயலாளர்களுக்கும் நியமன ஆணையுடன், வெள்ளி நாணயம் வழங்கி விஜய் வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம், மூன்றாம், நான்காம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் அடுத்தடுத்து வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தவெகவின் மாவட்ட செயலாளர்கள் ஐந்தாவது பட்டியலை தவெக தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ளார். புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார். அதில், "மக்களுக்கான அரசியலை, மக்களோடு மக்களாக நிற்பதை, மக்களுடன் நின்றே அறிவித்தோம். அதுதான் நமது முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவானது. அதில்தான். கழகத்தின் ஐம்பெரும் கொள்கைத் தலைவர்களை, மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளை, மாபெரும் செயல்திட்டங்களை அறிவித்தோம். அதன் வாயிலாக, அரசியல் களத்தின் அத்தனை திசைகளையும் அதிர வைத்தோம்.
இதோ. இந்த ஓராண்டுக்குள் எத்தனை எதிர்ப்புகளை, ஏகடியங்களைக் கடந்திருப்போம்? எதற்கும் அஞ்சாமல், எதைக் கண்டும் பதறாமல் நம் கருத்திலும் கருத்தியலிலும் நின்று. நிதானித்து, நேர்மையாக நடைபோட்டு வருகிறோம்.
குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடங்கி. பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு வரை. மக்கள் பிரச்சனைகளை மட்டுமே மையமாக வைத்து அரசியல் செய்து வருகிறோம். தனி மனிதர்களுக்கு எதிரான அரசியலைத் தவிர்த்தே வருகிறோம். இனியும் இப்படியேதான் தொடர்வோம். காரணம். தனி மனிதர்களைவிடத் தனித்து உயர்ந்தது. மக்களரசியல் மட்டுமே.
தொடரும் இப்பயணத்தில், கழகத்தின் உட்கட்டமைப்பை உறுதிப்படுத்தி, விரிவாக்கும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. அதன் வெளிப்பாடாகத்தான். நம் தோழர்கள் தேர்ந்தெடுத்த கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளை அறிவித்து வருகிறோம். தலைமைக் கழகத்துக்கான புதிய பொறுப்பாளர்களையும் நியமித்து வருகிறோம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் ரத்த நாளங்களான நம் கழகத் தோழர்களை அரசியல்மயப்படுத்தி, மக்கள் மத்தியில் அவர்களுக்கெனத் தனிப்பெரும் மரியாதையை மக்கள் பணிகள் மூலம் உருவாக்குவதே எப்போதும் நமது இலக்காக இருக்கும். அந்த இலக்கின் முதல் படிதான் வருகிற 2026 தேர்தல்.
இந்த வேளையில், கழகத்தின் இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழாவைக் கொண்டாடும் பொருட்டு, தமிழகமெங்கும் மக்கள் நலத்திட்டப் பணிகளை நம் தோழர்கள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் பணி வாயிலாக, நம் மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி, ஒரு வீடு விடாமல், தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் கழகத்தின் மணித்திருக்கொடியை ஏற்றி வைக்க வேண்டியது நம் தோழர்கள் ஒவ்வொருவரின் கடமை. இதை நீங்கள் அனைவரும் நிறைவேற்றுவீர்கள் என்று எனக்குத் தெரியும். இருந்தும், உங்களுக்கு நினைவூட்டவே இங்கு சொல்கிறேன்." எனத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு, கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து, தவெக-வின் கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர் , வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலையம்மாள் ஆகியோரது சிலைகளை திறந்துவைத்தார்.
இந்த நிலையில், தவெகவின் ஐந்தாம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை தவெக தலைவர் விஜய் வெளியிட்டார். அதன்படி, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கான ஐந்தாம் கட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications