இனி இந்த மாதிரி இடங்களில் பேனர் வைக்கவே கூடாது.. தவெக நிர்வாகிகளுக்கு பறந்த முக்கிய ஆர்டர்!
சென்னை: மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் எந்த காரணத்திற்காகவும் தவெகவினர் பேனர்கள் வைக்கக் கூடாது என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சியினருக்கு அறிவுறுத்தி உள்ளார்.
அரசியல் கட்சியினர் வைக்கும் பேனர்களால் பொதுமக்களுக்கு தொல்லைகள் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அண்மையில் தவெகவினர் வைத்த பேனர்களும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தின. இந்நிலையில் புஸ்ஸி ஆனந்த் கட்சியினருக்கு ஒரு முக்கிய அறிவுறுத்தலை வழங்கி உள்ளார்.

தவெக பேனர் மோதல்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிறந்தநாள் கடந்த 22 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி ரிஷிவந்தியம் அருகே கெடிலம் கூட்ரோடு பகுதியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பேனர் வைத்தனர். அந்த இடத்தில் திமுகவினர் பேனர் வைக்கக் கூடாது எனக் கூறி உள்ளனர். அதை மீறி தவெகவினர் பேனர் வைத்த நிலையில், நள்ளிரவில் அந்த பேனரை திமுகவினர் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனால் திமுக மற்றும் த.வெ.கவினர் இடையே நள்ளிரவில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் திமுகவைச் சேர்ந்த உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராஜவேல் மற்றும் அவருடன் வந்த நபர்கள் சேர்ந்து இவர்கள் மீது நடத்திய தாக்குதலில் சரவணன் மற்றும் ஜெயமனி ஆகியோரின் மண்டை உடைந்தது. இருவரும் ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் விபத்து
நடிகர் விஜய் பிறந்த நாளையொட்டி, தமிழக வெற்றி கழகம் சார்பில் சென்னை காவல்துறை மற்றும் மாநகராட்சி முன் அனுமதியின்றி சென்னை முழுவதும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகள் மற்றும் தெரு முனைகளில் அதிகளவில் நடிகர் விஜய் புகைப்படத்துடன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அளித்த தகவலின்படி சென்னை பெருநகர காவல் எல்லையில் முன் அனுமதியின்றி பேனர்கள் மற்றும் பொது இடங்களில் பட்டாசுகள் வெடித்து கேக் வெட்டிய தமிழக வெற்றி கழகத்தினர் மீது 53 வழக்குகள் தனித்தனியாக சம்பந்தப்பட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரி, கிழக்கு கடற்கரை சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட பேனர்களை போலீசார் அகற்றினர்.
முதியவர் காயம்
சென்னை சூளை பகுதியை சேர்ந்த மோகன் (70) என்ற முதியவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். இவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் பகுதி தவெக நிர்வாகிகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர் சூறைக்காற்றில் பறந்து முதியவர் மோகன் தலையில் விழுந்தது. இதில் அவர் ரத்தக்காயம் அடைந்தார். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் மோகனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
புஸ்ஸி ஆனந்த் அறிக்கை
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின் உத்தரவு மற்றும் அன்புக் கட்டளையின்படி கழகத்தின் சார்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும், உரிய அனுமதியுடன், மிகுந்த கண்ணியத்துடன் கட்டுப்பாடுடன் இருப்பதை கழக நிர்வாகிகள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.
இதுவரை, எந்தச் சூழலிலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களோ, விளம்பரப் பதாகைகளோ கழகம் சார்பில் வைக்கப்படவில்லை. நம் வெற்றித் தலைவர் அவர்களும் பேனர்கள் மற்றும் விளம்பரப் பதாகைகள் வைப்பதை விரும்புவதோ ஊக்கப்படுத்துவதோ இல்லை. எனவே, கழகத் தலைவர் அவர்களின் உத்தரவை மாநிலம், மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூர், கிளைக்கழகம் மற்றும் சார்பு அணிகள் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிலையிலான அமைப்புகளும் மிகவும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
எந்த காரணத்துக்காகவும்
குறிப்பாக, நகரில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், நெடுஞ்சாலையோரங்களிலும் கழகத்தின் சார்பில் பேனர்கள் எந்த காரணத்திற்காகவும் அறவே வைக்கக் கூடாது. இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும், காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிந்து, கழக வழக்கறிஞர்கள் அணியின் உதவியுடன் செயல்பட வேண்டும் என்று கழக நிர்வாகிகள், தோழர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications