தவெகவுக்கு ஆதரவு அளிப்பதா?.. 24 மணி நேரத்தில் முடிவு.. எம்.ஏ.பேபி தகவல்
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து ஆட்சியமைக்கும் நிலைக்கு வந்துள்ள நிலையில், அரசியல் களத்தில் அடுத்த கட்ட பரபரப்பு தொடங்கியுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை எட்ட பிற கட்சிகளின் ஆதரவு அவசியமான சூழல் உருவாகியுள்ளதால், தவெக தலைவர் விஜய் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை பெற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்டப்பேரவையில், ஆட்சியமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியமைக்க மேலும் 11 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகியுள்ளது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தனது 5 உறுப்பினர்களின் ஆதரவை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் ஆதரவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த மூன்று கட்சிகளுக்கும் தலா 2 உறுப்பினர்கள் உள்ளதால், அவர்களின் முடிவு தமிழக அரசியல் சூழலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்காக தவெக சார்பில் அந்த கட்சிகளுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி முக்கிய தகவலை வெளியிட்டார். அவர் கூறுகையில், "தமிழகத்தில் தவெக தனிப்பெரும் கட்சியாக மக்கள் ஆதரவை பெற்றுள்ளது. ஆட்சியமைக்க உரிமை கோரி விஜய் முன்வந்துள்ள நிலையில், அவரை தமிழக ஆளுநர் இன்னும் அழைக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஜனநாயக மரபுகளை ஆளுநர் முறையாக பின்பற்ற வேண்டும்," என்று தெரிவித்தார்.
மேலும், "எங்கள் கட்சி தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தை எட்டும் வகையில் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. தவெகவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து அடுத்த 24 மணி நேரத்துக்குள் முடிவு எடுக்கப்படும்," என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்று அடுத்த கட்ட அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தனர்.
மேலும், தவெகவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக இறுதி முடிவெடுக்க, இந்த மூன்று கட்சிகளின் செயற்குழுக் கூட்டமும் நாளை நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தின் முடிவே தமிழகத்தில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
தவெக தலைமையிலான புதிய ஆட்சி அமையுமா? அல்லது கூட்டணிக் கட்சிகள் வேறு அரசியல் முடிவை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பில் தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications