மதுரை மாநாட்டுக்காக அடிக்கும் பேனர்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் போட்ட உத்தரவு.. அதிமுகவுக்கும் பதில்
சென்னை: மதுரையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடக்கவுள்ள தவெகவின் 2வது மாநில மாநாட்டில் தொண்டர்கள் சார்பாக அடிக்கப்பட உள்ள பேனர்களில் "முதல்வர் வேட்பாளரே" என்பதை அடையாளப்படுத்த அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலமாகக் கூட்டணிக்கு அழைக்கும் கட்சிகளுக்கு தவெக தனது நிலைப்பாட்டை முழுமையாகத் தெரிவிக்க முடிவு எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார். முதலில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ், தற்போது தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

இதனிடையே அதிமுக - பாஜக கூட்டணி இணக்கமாக இல்லாத நிலையில், தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக - தவெக கூட்டணி அமைக்கப்படும் என்ற குரல் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதற்காகத்தான் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி ஆட்சி அமைக்க அதிமுக ஒன்றும் ஏமாளிகள் அல்ல என்று பாஜகவுக்கு பதிலடி கொடுத்து வருவதாகப் பார்க்கப்படுகிறது.
அதேபோல் தொகுதிப் பங்கீட்டிலும் பாஜக கூடுதல் தொகுதிகள் கேட்பதாக கூறப்படுகிறது. பாஜகவுக்கு 25 தொகுதிகளுக்கு மே கொடுக்க அதிமுகவுக்கு விருப்பமில்லை. ஆனால் பாஜக தரப்பில் 50 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் தவெக கடைசி நேரத்தில் அதிமுகவுடன் இணையலாம் என்ற வாதம் மக்கள் மத்தியில் வலுவாகி வருகிறது.
இந்த நிலையில் மதுரையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி தவெகவின் 2வது மாநில மாநாடு நடக்கவுள்ளது. எலியார்பத்தியில் நடக்க உள்ள மாநாட்டுப் பணிகளை தவெகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாநாட்டில் கூட்டணிக்கு அழைக்கும் கட்சிகளுக்கு ஒரு முக்கியமான செய்தியைக் கூறுவதற்கு விஜய் முடிவு எடுத்துள்ளார்.
அதன்படி மாநாட்டில் அடிக்கப்படும் அத்தனை பேனர்களிலும் மக்களின் முதல்வர் வேட்பாளரே என்ற வாசகம் இடம்பெற வேண்டும் என்று தவெக தலைமை மதுரை மற்றும் தென் மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மாநாட்டின் தீம் ஆகவும் அதனையே பின்பற்றத் திட்டமிட்டிருக்கிறது. இதனால் முதல்வர் வேட்பாளராக விஜயை ஏற்கும் கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்ற தவெகவின் நிலைப்பாடு வெளிப்படையாகத் தெரிந்துவிடும்.
அதேபோல் மதுரை மாநாட்டில் தவெகவின் முதற்கட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்ய விஜய் திட்டமிட்டு வருகிறார். ஏற்கனவே மாவட்டச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள சிலரை, வேட்பாளராக அறிவித்தால் தேர்தல் பணிகளை மேற்கொள்ள சரியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. விஜய் சுற்றுப்பயணத்தின் போது அவர்களுக்கும் கூடுதல் வெளிச்சமும் கிடைக்கும் என்று தவெக கணக்கிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications