“2 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு.. திமுக கள்ள ஓட்டு”.. தவாக வேல்முருகன் பரபர குற்றச்சாட்டு!
சென்னை: நெய்வேலி, குறிஞ்சிப்பாடி ஆகிய தொகுதிகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், பொதுமக்கள் மீது வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். திமுகவினர் திட்டமிட்டு சில வாக்குச்சாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டதாகவும் வேல்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "வரும் மே 18 ஆம் தேதி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்த உள்ளோம். அதற்கு முன்னதாக மே 5 ஆம் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சியின் கட்டமைப்பை எவ்வாறு வளர்த்தெடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனையை நடத்த உள்ளோம்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தவாக சார்பில் நெய்வேலி தொகுதியில் திருமாவளவன், குறிஞ்சிப்பாடி தொகுதியில் கண்ணன் ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்தி இருந்தேன். நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. இதை தங்களின் உளவுத்துறை மூலம் அறிந்த திமுக-வினர் அதைத் தடுக்க முயன்றனர். இரண்டு தொகுதிகளிலும் பல்வேறு இடங்களில் மிக மோசமான வன்முறை நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.
15 பேர் கொண்ட குண்டர்கள் நேரடியாக வன்முறையில் ஈடுபட்டனர். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. வன்முறை கும்பல் வீச்சரிவாளால் தாக்கியதில், ஒருவர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வன்முறையில் பொதுமக்கள் சிலரின் கார்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
திமுகவின் கொள்கையில் இருந்து மாறுபட்டு தனியாக செயல்பட்டதற்காக, இத்தகைய அராஜக செயல்களில் அவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். சில காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். இது எந்த விதத்தில் நியாயம்?" என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய வேல்முருகன், "திமுக திட்டமிட்டு சில வாக்குச்சாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டுகளை பதிவு செய்துள்ளது. இதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளேன். ஆனால் இதுவரை ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதற்கு நேர்மாறாக, எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதிந்துள்ளனர்." எனக் குற்றம்சாட்டினார்.
மேலும் பேசிய வேல்முருகன், "அதிமுக, பாஜக-வுடன் கூட்டணி அமைக்காமல், என்னை நம்பி என்னுடைய தலைமையை ஏற்ற சில ஆளுமைகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து, 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினேன். இந்த சூழலில் வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் சமூகங்களுக்கிடையே மோதலை உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர். இதற்கு இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications