தொகுதிக்கு 3 பேர்.. தவெகவில் விருப்ப மனு கொடுக்காமல் எஸ்கேப்பான நிர்வாகிகள்.. சோகமான விஜய்!
சென்னை: தவெக சார்பாக விருப்ப மனு அளித்தவர்களில் தொகுதிக்கு 3 பேரிடம் மட்டுமே விஜய் நேர்காணல் நடத்தப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த விவகாரம் வெளியில் லீக் ஆனதன் காரணமாகவே விருப்ப மனு பெற்றவர்களில் பலரும் மீண்டும் அதனை சமர்ப்பிக்காமல் எஸ்கேப் ஆகி இருக்கின்றனர்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், ஒவ்வொரு அரசியல் கட்சியும் கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். திமுக தலைமை மொத்தமாக 21 கட்சிகளுடன் கூட்டணியை அமைத்திருக்கிறது. அதிமுக இன்னும் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

ஆனால் தவெக தரப்பில் ஆட்சியில் பங்கு என்று அறிவித்த பின்னரும் இதுவரை எந்தக் கட்சியும் கூட்டணிக்கு செல்லவில்லை. இருப்பினும் தனித்தே சட்டசபைத் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. அந்த வகையில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் தேர்வில் தவெக மும்முரமாக உள்ளது. இதனால் விருப்ப மனு விநியோகம் செய்து வேட்பாளர்களை அடையாளம் கண்டு வருகிறது.
விருப்ப மனு அதிகளவில் கட்சித் தலைமையிடம் இருந்து பெற்ற போதும், அது எதிர்பார்த்த அளவிற்கு ரிட்டர்ன் வரவில்லை. இதுகுறித்து விசாரித்த போது, ஒவ்வொரு கட்சியிலும் விருப்ப மனு கொடுப்பதே கட்சியின் தலைவர்களை சந்தித்து சில நிமிடங்களாவது உரையாடுவதற்கு தான். ஆனால் தவெக தலைவர் விஜய் இம்முறை தொகுதிக்கு 3 பேரிடம் மட்டுமே நேர்காணல் நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் மாவட்டச் செயலாளர்கள் மூலமாக தொண்டர்களுக்கு லீக்காகிவிட்டது. இதனால் விருப்ப மனு பெற்றவர்களில் பலரும் விஜய்யை சந்திப்பதற்காக தான் விருப்ப மனுவே அளிக்கிறோம். அவரை சந்திக்க முடியவில்லை என்றால், எதற்காக அவ்வளவு பணம் கட்டி விருப்ப மனுவை கொடுக்க வேண்டும் என்று எஸ்கேப்பாகி இருக்கின்றனர்.
இதன் காரணமாகவே தவெக விருப்ப மனு எதிர்பார்த்த அளவிற்கு கட்சித் தலைமைக்கு திரும்ப வந்து சேரவில்லை. இதனால் மாவட்டச் செயலாளர்கள் மூலமாகவே வேட்பாளர்களை அடையாளம் காண தவெக தலைமை திட்டமிட்டு வருகிறது. வேட்பாளர்களுடன் மட்டும் விஜய் புகைப்படம் எடுக்கவும் முடிவு செய்திருக்கின்றனர். இது தவெக தொண்டர்களிடையே அதிருப்தியை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications