விஜய் செய்தது சரியா, தவறா? அவமரியாதையா, அவசியமா? வெடித்து கிளம்பிய விவாதம்!
சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழை காரணமாக விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னை டிபி சத்திரம் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் வரவழைத்து தவெக தலைவர் விஜய் நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளார். தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி வேலை பார்க்கும் நிலையில், விஜய் செய்தது சரியா என கேள்வி எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் விஜயின் செயல் சரிதான் என மற்றொரு தரப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "ஃபெஞ்சல்" புயல், மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக - புதுவை கடற்கரையை, புதுச்சேரி அருகில் நேற்று முன் தினம் இரவு சுமார் 11 மணி அளவில், கரையைக் கடந்தது.

புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசியது. இதன் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
தொடர்ந்து 11 மணிக்கு மேல் புயல் கடந்த நிலையில், புதுச்சேரி விழுப்புரம், கடலூர். திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் சுமார் 60 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசிய நிலையில் கனமழை கொட்டியது. குறிப்பாக கிருஷ்ணகிரி 300 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பதிவை சந்தித்துள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இரவு பகல் பாராமல் களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளை முடிக்கி விட்டுள்ளனர்.
மேலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களும் கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இதற்கிடையே தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் டிபி சத்திரத்தில் வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்த மக்களை நேரில் அழைத்து நிவாரண உதவி வழங்கியுள்ளார்.
பனையூர் கட்சி அலுவலகத்தில் 300 குடும்பங்களை சேர்ந்த மக்களை குடும்பத்திற்கு ஒருவர் என அழைத்து அவர்களிடம் பேசி உணவு வழங்கியுள்ள அவர், தொடர்ந்து அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். கடந்தாண்டு தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் புயல் காரணமாக பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அங்கு நேரில் சென்று விஜய் நிவாரணம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மற்ற அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி பணியாற்றும் நிலையில், தனது கட்சி அலுவலகத்திற்கு பேருந்தில் அழைத்து வந்து பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவது சரியா என விமர்சனம் எழுந்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்டு ஊர் ஊராக போகும்போது கூட்டம் வராதா, இப்போது மட்டும் கூட்டம் வரும் என்று சொல்வது சரியா, என வலைத்தளங்களில் கேள்வி எழுப்புகின்றனர் திமுகவினர்.
பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்குவது தான் மனிதநேயமாக இருக்கும். பாதிக்கப்பட்டவர்களை பேருந்தில் ஏற்றி வந்து அவர்களை தங்கள் இடத்தில் வைத்து நிவாரணம் கொடுப்பது மரியாதை இல்லை எனவும் விமர்சிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக ஒரு தரப்பு கருத்துக்களை முன்வைக்கிறது. விஜய் மிக பிரபலமான முகமாக இருப்பதாலும் அவர்களுக்கு ரசிகர் பட்டாளம் அதிகமாக இருப்பதால் வெள்ளம் பதித்த பகுதிகளுக்கு நேரில் சென்றால் அதிக அளவில் கூட்டம் திரள வாய்ப்பு இருக்கிறது. இதனால் மேலும் சில பிரச்சனைகள் எழலாம்.
ஏற்கனவே முதலமைச்சர், துணை முதலமைச்சர் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் இருக்கும் நிலையில் விஜயும் சென்றால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் கூடுதல் சிரமம் ஏற்படும். அதன் காரணமாகவே முதல் கட்டமாக தனது அலுவலகத்திற்கு அருகில் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து நிவாரண உதவிகள் வழங்கியிருக்கிறார்.
இன்னும் ஓரிரு நாட்களில் விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று நேரில் நிவாரண உதவிகளை வழங்கவிருக்கிறார். கடந்தாண்டு தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது விஜய் நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கியதை மறந்து விடக்கூடாது என்கின்றனர்.
இப்படியாக விஜயின் செயல்.. சமூக வலைதளங்களில் ஆதரவையும், எதிர்ப்பையும் பெற்று வருகிறது. விஜய் அடுத்த கட்டமாக என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்தே விமர்சனங்களுக்கு விடை கிடைக்கும்.












Click it and Unblock the Notifications