"அண்ணன் வர்ராரு"! தமிழகம் முழுவதும் மார்ச்சில் விஜய் சுற்றுப்பயணம்? சீனில் வந்த ஆதவ் அர்ஜுனா!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், வரும் மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதிலும் இந்த சுற்றுப்பயணத்திற்கான பொறுப்புகள் யாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி ஓராண்டு முடிவடைந்து இரண்டாம் ஆண்டு நடைபெறுகிறது. கிட்டதட்ட 370 நாட்களில் விஜய் ஒருமுறை கூட மக்களையோ பத்திரிகையாளர்களையோ சந்தித்ததில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே அவர் தனது அரசியல் நகர்வுகளை செய்து வருகிறார். தமிழகம் முழுவதும் மாவட்ட பொறுப்பாளர்களை 3 கட்டமாக நியமித்துள்ளார். பூத் ஏஜென்ட்டுகளும் நிரப்பப்பட்டுள்ளனர்.
அவர் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புகளையும் வேகமாக முடித்துவிட்டு அரசியலில் முழு வீச்சில் இறங்க தயாராகிவிட்டார். அண்மையில் கூட அவர் சென்னை டிபி சத்திரத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்திருந்தார்.
அப்போது கூட அவர் களத்திற்கு செல்லாமல் தனது பனையூர் அலுவலகத்தில் மக்களை வரவழைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கியதால் அந்த சம்பவம் பெரும் விமர்சனத்திற்குள்ளானது. இதுவரை எந்த ஒரு தலைவரும் இப்படி செய்ததில்லை, இது மக்களை அவமதிக்கும் போக்கு என அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சித்திருந்தனர்.
அது போல் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கு என நினைக்கும் விஷயங்களுக்கும் விஜய் தனது அறிக்கை மூலம் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். மேலும் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரந்தூரில் 1000 நாட்களுக்கு மேலாக விமான நிலையத்திற்கு நில கையகப்படுத்துதலை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளை சந்தித்தார்.
அப்போது கூட அவர் பிரச்சார வாகனத்தில் நின்று பேசினாரே தவிர அந்த மக்களுடன் கை கூட குலுக்கவில்லை. அவர்கள் அருகே சென்று விசாரிக்கவில்லை. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தவெக 2ஆம் ஆண்டு விழாவையொட்டி , முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கூட, பனையூரில் அரசியல் செய்யாமல் தம்பி விஜய் பணியூருக்கு வர வேண்டும்.
மக்களை சந்திக்க வேண்டும் என கேட்டு கொண்டிருந்தார். எப்போது மக்களுடன் மக்களாக இருந்துதான் அரசியல் செய்ய முடியும் என்றும் அவர் அறிவுறுத்திருந்தார். மாநில அரசு குறித்து விஜய் விமர்சனத்தை எந்த அமைச்சரிடம் கேட்டாலும் அவர்கள் சொல்வது, "முதலில் விஜய்யை பனையூரை விட்டும் டிவிட்டர் அரசியலை விட்டும் வெளியே வரச் சொல்லுங்கள். அப்பறம் நான் பதில் சொல்கிறேன்" என்றுதான் கூறி வருகிறார்கள்.
இதுகுறித்து விவாதங்களில் தவெக சார்பில் நிர்வாகிகள் கலந்து கொள்ளும் போதும் கேள்வி எழுப்பப்படுகின்றன. அதற்கு அவர்கள், விஜய் நிச்சயம் பொதுமக்களை சந்திப்பார் என கூறி வருகிறார்கள். இந்த நிலையில் மார்ச் மாதம் முதல் வாரம் முதல் தமிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மக்களை அவர் நேரடியாக சந்திக்கவில்லை என்ற விமர்சனத்திற்கு பதிலடியாக அவரது சுற்றுப்பயணம் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த பயண திட்டங்களை வகுக்கும் பொறுப்பு ஆதவ் அர்ஜுனாவிடம் வழங்கப்பட்டுள்ளதாம். இவர் அண்மையில்தான் விசிகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார்.
அவருக்கு தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனா, இது போன்ற மாநாடுகள், பிரச்சாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதில் வல்லவர். அவரது பிசிறு தட்டாத ஏற்பாடுகளை பார்த்து விசிக தலைவர் தொல் திருமாவளவன் அசந்து போய் அவருக்கு கட்சியில் முக்கிய பதவியை கொடுத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications