குட்டி நண்பாஸ்.. நண்பீஸ்.. இந்த முறை 3 நாட்கள் கொண்டாட்டம்தான்.. விஜய் கையில் பாராட்டு
சென்னை: தவெக தலைவர் விஜய் ஆக்டிவ் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் விஜய் ரசிகர்கள் அவரின் ஒவ்வொரு நகர்வையும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அந்த வகையில் மே 30 ஆம் தேதி தவெக கல்வி விருது விழாவில் விஜய் கலந்து கொள்கிறார். இந்த வருடம் 3 கட்டங்களாக அதாவது 3 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
நடிகர் விஜய் அரசியல் அவதாரம் எடுத்து சரியாக ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. விக்கிரவாண்டி மாநாடு, அம்பேக்தர் புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர் மக்களை சந்தித்து ஆறுதல் கூறியது, அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வழக்கில் ஆளுநரை சந்தித்தது, தவெக முதலாம் வருடம் பொதுக்குழு, கோவை பூத் கமிட்டி கருத்தரங்கம் என்று விஜய்யின் விரல் விட்டு எண்ணுமளவுக்கு சில நாட்கள் மட்டுமே அரசியல் களத்துக்கு வந்துள்ளார்.

தற்போது விஜய் இயக்குநர் அ. வினோத் இயக்கத்தில் ஜனநாயகம் படத்தில் நடித்து வருகிறார். தற்போது அந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்துடன் விஜய் திரைத்துறையை விட்டு விலகி முழுமையாக அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதத்தில் இருந்தே விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.
தவெக கோவை பூத் கமிட்டி மாநாட்டுக்கு விஜய் எதிர்பார்ததை விட அதிகளவு கூட்டம் கூடியது. அடுத்ததாக மதுரை அல்லது வேலூர் மாவட்டங்களில் பூத் கமிட்டி கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்குள் விஜய் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேடை ஏறவுள்ளார்.
விஜய் தவெக கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவதற்கே முன்பே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகளை தொகுதி வாரியாக தேர்வு செய்து அவர்களுக்கு விருது, ஊக்கத் தொகை சான்றிதழ் வழங்கி பாராட்டுவது வழக்கம். அந்த வகையில் தவெகவின் கல்வி விருது விழா வருகிற மே 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறும் இந்த கல்வி விருது விழா தொடர்ந்து மூன்றாவது வருடமாக நடைபெறுகிறது. 234 தொகுதிகளிலும் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவி, மாணவிகளை தேர்வு செய்து விருது வழங்கி பாராட்டுவதை விஜய் செய்து வருகிறார். முதல் வருடம் ஒரு நாளும், இரண்டாம் வருடம் 2 நாள்களும் இந்த கல்வி விருது விழா நடைபெற்றது.
இந்த வருடம் மொத்தம் 3 நாட்கள் (3 கட்டங்களாக) இந்த கல்வி விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இதுகுறித்து தவெக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில், "30.5.2025 வெள்ளிக்கிழமை மாமல்லபுரம் 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கவுள்ளார்.
அன்றைய தினம் அரியலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, சென்னை, செங்கல்பட்டு, திண்டுக்கல், திருவள்ளூர், தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குட்பட்ட 68 தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. "என்று கூறப்பட்டுள்ளது.
மற்ற தொகுதி மாணவர்களுக்கான கல்வி விருது விழா அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த வருடங்களில் நடைபெற்ற கல்வி விருது விழாவில் விஜய்யின் குட்டி ரசிகர்கள் செய்த சேட்டைகள் சமூகவலைதளங்களில் வைரலானது. அதனால் இந்த நிகழ்வை அவரின் ரசிகர்களும், தொண்டர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications