குட்டு வைத்த கோர்ட்.. பேச முடியாம உங்க லாயர் திணறினார்கள்.. மறந்துட்டீங்களா முதல்வரே.. விஜய் அட்டாக்
சென்னை: கரூர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திமுக வழக்கறிஞர்கள் திக்கி திணறி நின்றது முதல்வர் ஸ்டாலினுக்கு மறந்துவிட்டதா என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். மனிதாபிமானம், அடிப்படை மாண்பு இல்லாமல் அரசியல் ஆட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஆடத் தொடங்கிவிட்டதாக கூறிய விஜய், திமுக அரசு மீதான நம்பிக்கையை மக்கள் மண்ணிற்குள் குழி தோண்டி புதைத்துவிட்டார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. கரூர் சம்பவத்திற்கு பின் 38 நாட்கள் சைலண்ட் மோடில் இருந்த தவெக, தற்போது அரசியல் செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் பேசி இருக்கிறார்.

அதில் விஜய் பேசுகையில், இந்தியாவில் யாருக்கும் இல்லாத நிபந்தனைகள் தவெகவுக்கும், எனக்கும் விதிக்கப்பட்டது. குறுகிய மனம் கொண்ட முதல்வருக்கு சில கேள்விகளை முன் வைக்கிறேன். கரூர் சம்பவம் நடந்த பின் காவல்துறை அதிகாரிகள் அவசர அவசரமாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தது ஏன் என்று மக்களே கேட்டனர். அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்?
கரூர் விவகாரம் தொடர்பாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியது அத்தனை வடிகட்டிய பொய்.. கோரிக்கையே வைக்கப்பட்டாமல் எஸ்ஐடி அமைக்கப்பட்டது ஏன் என்று உச்சநீதிமன்றமே கேள்வி எழுப்பி இருக்கிறது. உண்மை நிலையை தெளிவுபடுத்ததான் என சட்டசபையில் சாமர்த்தியமாக முதல்வர் பேசியுள்ளார்.
ஒரு நாடகத்தனமான கொண்டாட்டத்தை நடத்தி விழா எடுத்தவர்களுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் கூறியது பொய் என்பதால் தான் எஸ்ஐடி-யை மண்டையில் கொட்டி அனுப்பி வைத்துவிட்டது நீதிமன்றம். அரசின் விசாரணை மீது சந்தேகம் என உச்சநீதிமன்றம் கூறினால், அதற்கு என்ன அர்த்தம்?
எந்த ஆவணத்தின் அடிப்படையில் எஸ்ஐடி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது என உச்சநீதிமன்றம் கேட்டது. உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திமுக வழக்கறிஞர்கள் வாதாட முடியாமல் மவுனம் காத்தனர். அதனை நாடே பார்த்தது அல்லவா.. இதையும் முதல்வர் ஸ்டாலின் மறந்துவிட்டாரா? அடிப்படை மாண்பு இல்லாமல் அரசியல் ஆட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஆடத் தொடங்கிவிட்டார்.
இதெல்லாம் திமுகவுக்கு புதிது அல்ல.. 1972க்கு பின் திமுகவை எதிர்த்து கேள்வி கேட்க ஆள் இல்லாததால், திமுக தலைமை இப்படியே தான் இருக்கிறது. இப்போது நாங்கள் கேள்வி கேட்கவில்லை.. இதெல்லாம் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. தமிழக அரசு மீதான நம்பிக்கையும் மண்ணிற்குள் புதைந்துவிட்டது.
இது புரியவில்லை என்றால், திமுக தலைமைக்கு மக்கள் இன்னும் அழுத்தமாக புரிய வைப்பார்கள். அப்போதும் கூட திமுக என்ன செய்யும் தெரியுமா.. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிடுவார்களே.. மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்.. அப்படினு அந்த அறிக்கையை வெளியிட்டுவிட்டு அறிவாலயத்திற்குள் போய் ஒளிந்து கொள்வார்கள்.
இப்போது அந்த அறிக்கையை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் நம் பக்கம் நிற்கிறார்கள். இந்த இடையூறு வெறும் தற்காலிகம் தான். மக்களுடன் களத்திற்கு சென்று நிற்போம். நம் பயணத்தில் தடம் மாற மாட்டோம். 2026ல் திமுக vs தவெக இடையில்தான் போட்டி.. அது இன்னும் வலிமையாக மாறப் போகிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications