8 மணி வரை டைம் இருந்தும்.. பாதியிலேயே சென்னையில் பிரசாரத்தை ரத்து செய்த விஜய்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வாக்குப்பதிவு தேதி நெருங்கி வருவதால், தலைவர்கள் நேரடியாக மக்களை சந்தித்து ஆதரவை பெறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூரில் தவெக தலைவர் விஜய் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று சென்னையில் 3 இடங்களில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரிக்க இருந்தார்.
ஆனால் தி நகர் மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதிகளில் மட்டுமே விஜய் ரோடு ஷோ சென்ற நிலையில் புரசைவாக்கம் செல்லாமல் வீடு திரும்பினார். அதாவது இரவு 8 மணி வரைக்கும் போலீசார் அனுமதி அளித்து இருந்தும் விஜய் 6 மணியோடு பிரசாரத்தை ஒத்தி வைத்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 8 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்டார்.
சென்னை தியாகராயநகரில் த.வெ.க. வேட்பாளராகப் போட்டியிடும் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்தை ஆதரித்து தவெக தலைவர் விஜய் இன்று மாலை 4 மணிக்கு பிரசாரம் மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, ஆயிரம் விளக்கு, எழும்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரத்தில் ஈடுபட இருந்தார். ஆனால் பரப்புரை எதுவும் மேற்கொள்ளாமல் ரோடு ஷோ மட்டுமே சென்றார். வேட்பாளர்களை வேனில் ஏற்றி அறிமுகம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து விஜய் ரோடு ஷோவாக எழும்பூர் வரை வந்தார். ஆனால் புரசைவாக்கம் செல்லவில்லை. இரவு 8 மணி வரை போலீசார் விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி அளித்து இருந்த நிலையில் விஜய் இதனை ரத்து செய்துவிட்டு பாதியிலேயே வீடு திரும்பினார்.












Click it and Unblock the Notifications