தவெகவின் அடுத்த திட்டம் என்ன? நவம்பர் 5ல் நடக்கும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கும் விஜய்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நவம்பர் 5ஆம் தேதி நடக்கும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். தவெகவின் அடுத்தக் கட்ட செயல்பாடுகள் மற்றும் முடிவுகள் எடுக்க இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டப்படுவதாக கூறியுள்ள விஜய், தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் துயரச் சம்பவத்திற்கு பின் தவெக தலைவர் விஜய் உட்பட அத்தனை நிர்வாகிகளும் அமைதி காத்து வந்தனர். கடந்த திங்கட் கிழமையன்று கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் அழைத்து மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் விஜய் சந்தித்தார். அப்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு விஜய் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து விஜய் தனது அரசியல் பணிகளை வேகப்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே தவெக தரப்பில் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு, அதன் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிலையில் தவெகவின் அடுத்தக் கட்ட செயல்பாடுகள் குறித்த முடிவு எடுப்பதற்காக சிறப்பு பொதுக்குழுவை விஜய் கூட்டி இருக்கிறார்.
இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஓர் ஆழ்நீள் அடரமைதிக்குப் பிறகு, உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம் இது. சூழ்ச்சியாளர்கள், சூதுமதியாளர்கள் 'துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும், அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது.
தமிழக வெற்றிக் கழகத்தின் படைக்கலன்களாக நீங்கள் இருக்கையில், நம்மைக் காக்கும் கவசமாக நம் தமிழ்நாட்டு மக்கள் இருக்கையில், அவர்களோடு நமக்குள்ள உறவை, அவர்களுக்கான குரலாகத் தொடரும் நம் வெற்றிப் பயணத்தை எவராலும் தடுக்க இயலாது. இதை நாம் சொல்ல வேண்டியதே இல்லை. கடந்த ஒரு மாத காலமாக, தமிழக மக்களே இதை மவுன சாட்சியாக உலகிற்கு உரைத்துக்கொண்டிருக்கின்றனர்.
சூழ்ச்சிகளாலும் சூதுகளாலும் நம்மை வென்றுவிடலாம் என்று கனவு காணும் எதிரிகளும் இதை உணர்ந்தே உள்ளனர். கள நிலவரம் நம்மை ஊக்குவிப்பதாக இருக்கையில்தான், நமது அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும் அளந்தும் தீர்க்கமாகவும் நாம் எடுத்து வைக்க வேண்டும்.
இத்தகைய சூழலில், கழகத்தின் அடுத்த கட்டத் தொடர் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும்.
ஆகவே, இவை குறித்து முடிவுகள் எடுக்கும் பொருட்டு, கழகத்தின் இதயமான பொதுக்குழுவின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளோம். அதன்படி, வருகிற 05.11.2025 புதன்கிழமை அன்று, நம் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications