விஜய்க்கு மனிதாபிமானம் இருக்கா? நேரில் சென்று கூட ஆறுதல் சொல்லவில்லை.. கேட்கிறார் துரைமுருகன்!
வேலூர்: கரூர் விவகாரத்தில் 41 பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்துவிட்டு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சென்று கூட பார்க்காமல், ஆறுதல் சொல்லாமல் இருந்த விஜய், மனிதாபிமானம் உள்ளவர்.. நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களா என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் வேலூர் மாவட்ட வடக்கு செயலாளராக கதிர் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டதால், அமைச்சர் துரைமுருகன் குடும்பத்தினர் உற்சாகத்தில் உள்ளனர். சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கதிர் ஆனந்த்-க்கு பதவி அளிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் வேலூரில் அமைச்சர் துரைமுருகன் அதிகமாக நேரம் செலவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் வேலூரில் தனது இல்லத்தில் செய்தியாளார்களை சந்தித்து துரைமுருகன் பேசுகையில், கொடநாடு வழக்கில் என்ன பூச்சாண்டி காட்டினாலும் பயப்பட மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரே என்ற கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி தனது நிலைமையை சொல்கிறார். ஆனால் சட்டம் என்ன சொல்கிறதோ, அதனைதான் தமிழக அரசு செய்யும் என்றார்.
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் மாண்பு இல்லாமல் கரூர் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுவதாக தவெக தலைவர் விஜய் பேசியுள்ளாரே என்ற கேள்விக்கு, கரூர் விவகாரத்தில் 41 பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்துவிட்டு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சென்று கூட பார்க்காமல், ஆறுதல் சொல்லாமல் இருந்த விஜய், மனிதாபிமானம் உள்ளவர்.
நாங்கள் மனிதாபிமனம் இல்லாதவரா? என்று தெரிவித்தார். தொடர்ந்து செங்கோட்டையன் பற்றிய கேள்விக்கு, எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் இருப்பவர் செங்கோட்டையன். ஏன் இப்படி முடிவெடுத்தார் என்று அவருக்குதான் தெரியும். உண்மை வெளிவந்துவிட்டது என்று தெரிவித்தார். விஜய்யை மனிதாபிமானம் இல்லாதவர் என்று துரைமுருகன் விமர்சித்திருப்பது தவெகவினர் இடையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்திற்கு பின் 30 நாட்களாக விஜய் அமைதியாக இருந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரம் வரவழைத்து விஜய் ஆறுதல் தெரிவித்தார். இது தவெகவினர் மத்தியில் கடுமையான விமர்சனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications