இது தான் தவெகவின் அஜெண்டா.. விஜய் தரப்பு வெளியிட்ட ஏழு முக்கிய திட்டங்கள்
சென்னை: 21-ஆம் நூற்றாண்டின் நல்லாட்சிக்கான தவெக-வின் செயல்திட்டங்கள் என்ற பெயரில் அரசியல் வாக்குறுதிகளை தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில் AI மூலம் விண்ணப்பிக்காமல் வீட்டுக்கே வரும் நலத்திட்டங்கள், அரசுச் சேவைகளுக்கான பிரத்யேக சூப்பர் ஆப், மற்றும் இந்தியாவின் முதல் 'AI அமைச்சகம்' போன்ற நவீன வாக்குறுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஊழலற்ற நிர்வாகம், கடன் சுமையற்ற நிதித் தன்னிறைவு மற்றும் மக்கள் பங்கேற்புடன் கூடிய டிஜிட்டல் தமிழகத்தை உருவாக்குவதே விஜய்யின் பிரதான இலக்காக உள்ளது.
தவெக-வின் செயல்திட்டங்களை அப்படியே முழுமையாக பார்ப்போம்.
1. சிட்டிசன் பிரிவிலேஜ் கார்டு
AI தொழில்நுட்பம் மூலம் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் விண்ணப்பிக்காமலே நேரடியாக மக்களின் வீட்டு வாசலுக்கே வந்து சேரும்.

2. சேவை உரிமைச் சட்டம்
வெற்றித் தமிழ்நாடு சூப்பர் ஆப் மூலம் அனைத்துச் சேவைகளும் மொபைலில் கிடைப்பதோடு, சேவையைத் தாமதப்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கையும் உறுதி செய்யப்படும்.
3. நிர்வாகக் கண்காணிப்புத் திரை
அரசின் பட்ஜெட் நிதி ஒதுக்கீடு மற்றும் செலவினங்கள், 'ரியல் டைம் டேஷ்போர்டு' மூலம் மக்கள் கண்காணிப்பிற்கு வெளிப்படையாக்கப்படும்.
4. நிர்வாகத்தில் மக்கள் பங்களிப்பு
myvettritamilnadu.in தளம் வாயிலாகப் பொதுமக்கள் அரசின் கொள்கை முடிவுகளில் பங்கேற்கவும், நிதிநிலைச் செலவுகளைக் கண்காணிக்கவும் அதிகாரம் வழங்கப்படும்.
5. மக்கள் அரங்கம்
சட்டமன்றத்தில் பொதுமக்களின் மனுக்கள் மீது விவாதம் நடத்துவதும், அதற்கு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாகப் பதிலளிப்பதும் சட்டப்படிக் கட்டாயமாக்கப்படும்.
6. AI மற்றும் டிஜிட்டல் தலைநகர்
இந்தியாவின் முதல் 'செயற்கை நுண்ணறிவு அமைச்சகம்' மற்றும் பிரத்யேக 'AI CITY' மூலம் 1,000 புத்தொழில் நிறுவனங்களை உருவாக்கி, தமிழ்நாடு இந்தியாவின் AI மற்றும் டிட்டல் தலைநகராக மாற்றப்படும்.
7. நிதித் தன்னிறைவு
கூடுதல் வரிச்சுமையின்றி புதிய வருவாய் வழிகளை உருவாக்கி, கடன் சுமையை ஒழித்துத் தமிழகம் நிதி ரீதியாகத் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றப்படும்." இவ்வாறு தவெக வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தவெக அறிவித்துள்ள சில முக்கிய 'இலவச' மற்றும் சலுகை சார்ந்த திட்டங்கள் :
இலவசக் கல்வி மற்றும் மருத்துவம்: மாநிலம் முழுவதும் அனைவருக்கும் உயர்தரமான கல்வியும், நவீன மருத்துவ வசதிகளும் தங்குதடையின்றி, கட்டணமின்றி கிடைக்கச் செய்தல்.
விண்ணப்பிக்காத நலத்திட்டங்கள் : 'சிட்டிசன் பிரிவிலேஜ் கார்டு' மூலம் மக்கள் அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், எந்தச் செலவும் இன்றி தகுதியான நலத்திட்டங்கள் தானாகவே அவர்கள் வீட்டு வாசலுக்கு வரும்.
வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை: ஒவ்வொரு குடும்பத்திலும் தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.
விவசாயிகளுக்கான சலுகைகள்: விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்வது போன்ற வாக்குறுதிகள்.
மகளிர் அதிகாரம்: அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு முன்னுரிமை மற்றும் அவர்களின் பொருளாதாரத் தேவைகளுக்கான நிதி உதவிகள்.
அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS): ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது.












Click it and Unblock the Notifications