சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் அதிகாலையில் இரட்டைக் கொலை.. பிடிபட்ட 8 பேர் கும்பல்!
சென்னை: சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துளசிங்க முதலியார் தெருவில் வசிக்கும் ஆறுமுகம், சந்தோஷை வீட்டில் புகுந்து மர்மநபர்கள் வெட்டிக் கொன்றனர். சடலங்களை கைப்பற்றி போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முடிச்சூரைச் சேர்ந்த ஆறுமுகம் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்து வெளியே வந்த ஆறுமுகம், திரிசூலம் பகுதியில் தங்கி இருந்துள்ளார்.

இந்நிலையில், துளசிங்க முதலியார் தெருவில் வசிக்கும் ஆறுமுகம், மற்றும் அங்கு இருந்த 17 வயது சிறுவன் சந்தோஷை இன்று அதிகாலையில் வீட்டில் புகுந்து மர்மநபர்கள் வெட்டிக் கொன்றனர். முன்விரோதம் காரணமக இந்த இரட்டைக் கொலை சம்பவம் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து, சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்திற்கு, கடந்த ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில் நடைபெற்ற திமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், முன்பகை காரணமாக தற்போது இருவரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார். மேலும், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், பல்லாவரம் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகள் 4 பேரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களும் தீவிர தேடல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, விசாரணையின் முடிவில் தான் இந்த கொலை எதற்காக நடத்தப்பட்டது எனத் தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications