5 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்குவோம்.. வாக்குறுதி அளித்த எடப்பாடி பழனிசாமி
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனமும், மாணவர்களுக்கு லேப்டாப்பும் வழங்கப்படும் என அறிவித்தார். அதிமுக ஆட்சிக்கு வந்ததும், தற்போது உள்ள 125 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்றும் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். இந்தப் பரப்புரையில் அவர் பேசுகையில், "திராவிட முன்னேற்ற கழகம் ஒரு தீய சக்தி என்று கூறியவர் எம்.ஜி.ஆர். தீய சக்தி திமுகவை அகற்ற வேண்டும் என்று தான் அதிமுகவை தொடங்கினார். அதனை கட்டிக் காத்தவர் அம்மா. தீய சக்தி திமுகவை தமிழகத்தில் வேரோடு அகற்றுவதே அதிமுகவின் லட்சியம். கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து தீய சக்தி திமுகவை அகற்ற வேண்டும் என்பது தான் நம்முடைய நிலைப்பாடு. திமுக ஆட்சி அகற்றப்படுவதற்கு இன்னும் மூன்றே அமாவாசைகள் தான் மிச்சமுள்ளன.

மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி விழாவில் எனக்கு சாவல் விடும் விதமாக சேலஞ்ச் செய்தார். ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உறுவாக்கியதே அதிமுக ஆட்சியில் தான். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதில் 5 சதவீதம் தான் திமுக நிறைவேற்றி இருக்கிறது. ஆனால் அதிமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை 95 சதவீதம் நிறைவேற்றி உள்ளது.
திமுக தேர்தல் வாக்குறுதியில், 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என சொன்னார்கள் ஆனால் உயர்த்தினார்களா? அத்தனையும் பொய்.
தற்போது அதிமுக வைத்த கோரிக்கையால் 100 நாள் வேலை திட்டம் 125 நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் உயர்த்தி தரப்படும் என திமுக வாக்குறுதி அறிக்கையில் சொல்லப்பட்டது. ஆனால் சம்பளத்தை உயர்த்தினார்களா? 100 நாள் வேலை திட்டத்தை கூட முழுமையாக கொடுக்காத அரசு திமுக அரசு. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு 125 நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்கள் 150 நாட்களாக உயர்த்தப்படும். ஊதியம் உயர்த்தி தரப்படும். தடை இல்லாமல் பணி வழங்கப்படும். இது அதிமுகவின் லட்சியம்.
வேண்டுமென்றே திட்டமிட்டு ஊழியர்களுக்கு தவறான அவதூறு பிரசாரத்தை பரப்பி வருகிறார் மு.க.ஸ்டாலின். 100 நாள் வேலை திட்டம் ரத்து செய்யப்படுவதாக பொய் சொல்கிறார் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 100 சதவீதம் உறுதியாக சொல்கிறோம். தற்போது 100 நாள் வேலை திட்டம் 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாங்கள் மேலும் கோரிக்கை வைத்து 125 நாட்களை 150 நாட்களாக உயர்த்துவதற்கான நடவடிக்கையை அதிமுக கட்சி எடுக்கும். அதிமுக ஆட்சி அமைத்த உடன் இது நிறைவேற்றப்படும்.
கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு விலையில்லா சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது. அத்துடன் மக்களுக்குத் தேவையான நிதி உதவியும் அளிக்கப்பட்டது. குறிப்பாக, அந்த சமயத்தில் வந்த தைப் பொங்கலின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2,500 வழங்கினோம். அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் ஸ்டாலின், ரூபாய் 5,000 வழங்க வேண்டும் என்று கோரினார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அடுத்த பொங்கலின் போது ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை.
திமுக ஆட்சிக்கு இறுதிக்காலம் நெருங்கிவிட்டது. இனியாவது மக்களின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு, அவர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் தைப் பொங்கலுக்கு ரூபாய் 5,000 வழங்க வேண்டும். அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை. எனவே, ஆட்சியில் இருந்து செல்லும்போதாவது மக்களுக்கு ரூபாய் 5,000 வழங்கி அவர்கள் வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்." என்றார்.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் 5 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனமும், மாணவர்களுக்கு லேப்டாப்பும் வழங்கப்படும. அதிமுக ஆட்சிக்கு வந்ததும், தற்போது உள்ள 125 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்றும் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications