இனி ‘கடைசி’ பெஞ்ச் கிடையாது.. தமிழக பள்ளிகளிலும் ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைக்க அரசு உத்தரவு!
சென்னை: கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களை 'ப' வடிவில் இருக்கைகள் அமைத்து அமர வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
'ஸ்தனார்த்தி ஸ்ரீகுட்டன்' என்ற ஒரு மலையாள திரைப்படத்தால் கேரள பள்ளிகளில் வகுப்பறைகளே அடியோடு மாறியுள்ள நிலையில், அது தற்போது தமிழ்நாடு வரை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைகளாக இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த இருக்கை வரிசைகளில் முன் வரிசைகளில் அமரும் மாணவர்கள் படிப்பாளிகள் எனக் கருதும் வழக்கம் இருக்கிறது. கடைசி பெஞ்ச்களில் இருப்பவர்கள் சேட்டை செய்பவர்கள் என்பது பொதுப் புத்தியில் பதிந்த ஒன்று. இந்நிலையில் இந்த பாகுபாட்டால் மாணவர்களிடையே ஏற்படும் அழுத்தத்தை மாற்றும்படி வந்துள்ளது ஒரு திரைப்படம்.
ஓடிடி தளத்தில் வெளியான மலையாளத் திரைப்படம்'ஸ்தனார்த்தி ஸ்ரீகுட்டன்' (Sthanarthi Sreekuttan). இந்தப் படம், பள்ளி இருக்கையில் முதல் பெஞ்ச், கடைசி பெஞ்ச் என்ற பிரிவினை உளவியல் ரீதியான குழந்தைகளுக்கு சுமையாக இருப்பதைச் சுட்டிக்காட்டி உள்ளது.
இந்தத் திரைப்படத்தின் தாக்கத்தால் கேரளாவின் பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் இருக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக இல்லாமல், அரை வட்ட, வடிவமாக மாற்றப்பட்டுள்ளன. இது பள்ளி மாணவர்கள் மத்தியில் உளவியல் ரீதியாக நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி, கேரளாவின் பெரும்பாலான பள்ளிகளிலும் இதுபோல மாற்றப்பட்டுள்ளது.
கேரளாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் 'ப' வடிவில் உட்கார வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பள்ளிகளில் இனி கடைசி பெஞ்ச் என்பது கிடையாது. மாணவர்களை 'ப' வடிவில் அமர வைப்பதன் மூலமாக கல்வியில், கவனத்தில் அனைவருக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் இருக்கும். மாணவர்கள் ஒருவரையொருவர் பார்க்க, ஆசிரியரைக் கவனிக்க வசதியாக இருக்கும்.
கடைசி இருக்கை மாணவர்கள் என்ற எண்ணம் மாணவர்களுக்கு இருக்கக்கூடாது எனவும், இந்த வடிவில் அனைவரும் அமரும் போது மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க, ஆசிரியரை கவனிக்க வசதியாக இருக்கும் எனவும் பள்ளி கல்வி துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications