'வெளிநாடு செல்ல இந்த இரண்டும் தேவை.. நிறைவேற்றி தாருங்கள் முதல்வரே..'அமீரக திமுக அமைப்பாளர் கோரிக்கை
சென்னை: தமிழ்நாட்டிலிருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்களுக்கு உதவும் வகையில் மாநிலத்தில் உள்ள நான்கு சர்வதேச விமான நிலையங்களிலும் RT-PCR and RAPID PCR முறையில் விரைவு கொரோனா பரிசோதனை வசதி செய்து தர வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு அமீரக திமுக அமைப்பாளர் எஸ் எஸ் மீரான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. அதன் பிறகு ஏப்ரல் மாதம் உச்சமடைந்தது, இதன் காரணமாக உலகில் உள்ள பல நாடுகள் இந்தியாவிலிருந்து பயணிகள் வருவதைக் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தடை விதித்தன.
தமிழ்நாடு, கேரளா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் அமீரகம், சவுதி அரேபியா, குவைத், உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்குச் சென்று பணியாற்றுபவர்கள். ஆனால், தடை உத்தரவால் இந்த வளைகுடா நாடுகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

கொரோனா நெகடிவ் சான்றிதழ்
நாட்டில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில், அமீரகம் உள்ளிட்ட சில வளைகுடா நாடுகள் வரும் 15 அல்லது 21 ஆம் தேதி முதல் இந்தியப் பயணிகளை நிபந்தனைகளுடன் அனுமதிக்க இருப்பதாக அறிவித்துள்ளன. அதன்படி வரும் பயணிகள் அனைவரும் விமானம் புறப்படும் 48 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட RT-PCR சோதனை முறையில் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மேலும் அச்சான்றிதழில் QR CODE (விரைவு தகவல் குறியீடு) இடம் பெற்றிருக்க வேண்டும்

நிபந்தனைகள்
இதுதவிர, பயணிகள் அனைவரும் விமானம் புறப்படும் 4 மணி நேரத்திற்கு முன்னதாக RAPID PCR சோதனை முறையில் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளையும் நிறைவேற்றும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனத் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இல்லை
இருப்பினும், நிபந்தனை எண் ஒன்றின்படி RT PCR பரிசோதனை சான்றிதழ் முடிவுகளில் பாஸ்போர்ட் நம்பர் மற்றும் QR CODE (விரைவு தகவல் குறியிடு) அளிக்கும் வசதி தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இல்லை. இதனால் வெளிநாடு செல்பவர்கள் பாஸ்போர்ட் நம்பர் மற்றும் QR CODE (விரைவு தகவல் குறியிடு) குறிப்பிடும் வசதி உள்ள தனியார் பரிசோதனை கூடங்களில் இச்சான்றிதழ் பெறக் கட்டணமாக ரூபாய் 2500 முதல் 3000 செலுத்த வேண்டிய நிலை உள்ளது. அதேபோல தமிழ்நாட்டிலுள்ள நான்கு சர்வதேச விமான நிலையங்களில் எதிலும் RAPID PCR சோதனை செய்து சான்றிதழ் அளிக்கும் வசதிகள் இல்லை.

திமுக அமைப்பாளர் கோரிக்கை
இந்த வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு அமீரக திமுக அமைப்பாளர் எஸ் எஸ் மீரான் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை, திருச்சி, கோவை மற்றும் மதுரை சர்வதேச விமான நிலையங்களில் RT-PCR and RAPID PCR முறையில் விரைவு கொரோனா பரிசோதனை வசதி அமைத்திடவும், வெளி நாடு வாழ் தமிழர்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாகச் சோதனை செய்து சான்றிதழ் அளிக்க வேண்டும் என்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் RT PCR பரிசோதனை சான்றிதழ் முடிவுகளில் பாஸ்போர்ட் நம்பர் மற்றும் QR CODE (விரைவு தகவல் குறியீடு) அளிக்கும் வசதி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இலவசமாக வழங்க வேண்டும்
மேலும், அவர் தனது கடிதத்தில், "வெளிநாடு வாழ் தமிழர்கள் கடந்த சில வருடங்களாக உலக பொருளாதார மந்த நிலையாலும், குறிப்பாகக் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தின் காரணமாக வேலை நீக்கம், ஊதிய குறைப்பு மற்றும் நீண்டகால பணி விடுப்பு போன்றவற்றால் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகிறார்கள். ஆகவே, வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட தாங்கள், எங்களுடைய கோரிக்கையை ஏற்று இத்தகையச் சான்றிதழ்களை, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக அளிக்க உத்தரவிட வேண்டுகிறேன்" என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

கேரள விமான நிலையம்
இந்தியாவில் RAPID PCR சோதனை முறையில் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் அளிக்கும் வசதி Kochi International Airportஇல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி சமீபத்தில் கொச்சியிலிருந்து 140 பயணிகளுடன் அபுதாபிக்குச் சிறப்பு விமானம் இயக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications