“ரொம்ப ரொம்ப தாங்ஸ் உதய் அண்ணா!” .. உற்சாக மழையில் நனைந்த மழலைகள்
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சாமானிய மக்களின் குழந்தைகளை ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டியைக் காண அழைத்துச் சென்றுள்ளார்.
சுமார் 16 ஆண்டுகள் கழித்து சென்னை எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் 7வது 'ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை - 2023' தொடர் போட்டி கடந்த 3ஆம் தேதி தொடங்கியது.

இதில் பங்கேற்பதற்காகச் சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், கொரியா, இந்தியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதற்காக சுமார் 16 கோடி ரூபாய் செலவில் Olympic Standard New Synthetic Turf போடப்பட்டுள்ளது.
வீரர்கள் ஆடுவதற்காகப் போடப்பட்டுள்ள Hockey Blue Turf விரிப்பு உலகத்திலேயே அட்வான்ஸ் தரத்திலானது என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலரான மேகநாத ரெட்டி ஐஏஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.

ஆட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே இந்திய அணியானது மிக உற்சாகமாகச் சீனாவை எதிர்கொண்டு ஆடியது. இந்திய அணி, 7-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தியது. ஆகவே போட்டியைக் காணவந்த ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.
இந்திய ஹாக்கி அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்திக் பங்கேற்று ஆடிவருகிறார். அவர் இந்த வெற்றி குறித்து, "எனது சொந்த மண்ணில் நான் விளையாடி வருகிறேன். அதுவும் என் குடும்பத்தினர் முன்னால் இந்த ஆட்டத்தில் ஆடுவது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது. முதல் நாள் ஆட்டமே நல்ல உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

முதல் போட்டியே சிறப்பாகத் தொடங்கி உள்ளதால், அது அடுத்தடுத்த போட்டிக்கும் உதவிக்கரமாக இருக்கும். ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இன்னும் ஒரு வருடம்தான் உள்ளது. இந்தப் பயிற்சிகள் எல்லாம் அதற்கு உறுதுணையாக இருக்கும்" என்கிறார் அவர்.
இந்தப் போட்டி குறித்தும் தமிழ்நாடு குறித்தும் பாகிஸ்தான் ஹாக்கி பயிற்சியாளர் முகமது சக்ளைன் சில வைரல் ரக வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர், "கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னதாக 2007இல் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் நான்தான் எங்கள் அணிக்கு கேப்டன் ஆக இருந்தேன். கடந்த சில தினங்களாக ரசிகர்களின் வரவேற்பு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.
இந்திய அணியுடன் விளையாடுவதற்காகக் காத்திருக்கிறோம். நாங்கள் பாகிஸ்தானில் இருப்பது போலவே உணர்கிறோம். அந்த அளவுக்கு இந்த மக்கள் மரியாதையுடன் எங்களை நடத்துகின்றனர்" என மெய்சிலிர்க்கப் பேசியுள்ளார்.

இந்நிலையில்தான் இந்தியா - ஜப்பான் அணிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டியைத் தனது தொகுதி குழந்தைகள் நேரில் காண்பதற்காக அழைத்துக் கொண்டு சென்றுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இது தொடர்பாக அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் "நம் #ChepaukTriplicane தொகுதிக்கு உட்பட்ட அயோத்தியா நகர், ராயப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் ஹாக்கி விளையாட்டில் ஈடுபாட்டுடன் உள்ள மாணவர் - மாணவியர்களின் #AsianChampionshipTrophy ஹாக்கியை நேரில் ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக, இன்று நடைபெற்ற இந்தியா - ஜப்பான் அணிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டியைக் காண ஏற்பாடு செய்தோம்.
மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்ற இந்தப் போட்டியைக் கண்டு களித்த இம்மாணவர்கள் நாளைய வீரர் - வீராங்கனைகளாக உருவெடுக்க வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சரி, இந்த ஹாக்கி போட்டியை நேரில் கண்டு ரசித்த சேப்பாக்கம் திருவல்லிக்கேணி குழந்தைகள் என்ன சொல்கிறார்கள்?
"நான் இதுவரை ஹாக்கி போட்டியை நேரில் பார்த்ததே இல்லை. இப்போதுதான் முதன்முறையாகப் பார்த்தேன். இந்தியா- ஜப்பான் மேட்ச் பார்த்தோம். ரொம்ப சந்தோஷமாக இருந்தது" என்கிறார் இந்த சாமானிய குடும்பத்தைச் சேர்ந்த வருங்கால சாம்பியன்.
இவரைப் போலவே மழலை குரல் குறையாமல் பேசுகிறார் யாழினி. "நான் இதுவரை அந்த ஸ்டேடியத்திற்குள் போனதே இல்லை. உதய் அண்ணாதான் எங்களைக் கூப்பிட்டுக் கொண்டுபோனார். செம மாஸ் ஆ இருந்தது. லைட் எல்லாம் போட்டு செம்மையா இருந்தது ஸ்டேடியம்" எனக் கொஞ்சிப் பேசும் அவரிடம் யார் உங்களை எல்லாம் கூப்பிட்டுச் சென்றார்? தெரியுமா? என்றோம்.
"ஓ.. நல்லா தெரியுமே. எங்கள் உதய் அண்ணாதான் கூப்பிட்டுப் போனார். அவர்தான் எங்கள் எம்.எல்.ஏ. உதய் அண்ணாவுக்கு தாங்ஸ்" என்கிறார் உற்சாகமாக.

பிரஜின், "நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன். ஹாக்கி மேட்ச் பார்க்கக் கூப்பிட்டுப் போனாங்க. செம ஜாலியா இருந்தது" என்கிறான்.
"என்னை மட்டும் கூப்பிட்டுப் போகவில்லை. என்னுடைய ஃபிரெண்ட்ஸ் எல்லோரையும் கூப்பிட்டுப் போனார் உதய் அண்ணா. அப்புறம் ஃபுட் எல்லாம் வாங்கி கொடுத்தார். மேட்ச் பார்க்கும் போது ஸ்நாக்ஸ் வாங்கிக் கொடுத்தார். அவரும் எங்கள் கூடவே உட்கார்ந்து மேட்ச் பார்த்தார். செம என்ஜாய்மெண்ட். வேற லெவல். நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. உதய் அண்ணாவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி" என்கிறார் பாவன்யா.
"இதற்கு முன்னால் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் மேட்சுக்கு எங்களை வண்டி வைத்து உதய் அண்ணாதான் கூப்பிட்டுப் போனார். இப்போதும் ஹாக்கி போட்டிக்குக் கூப்பிட்டு வந்திருக்கிறார். நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. நாங்கள் எல்லாம் மேட்சை நேரில் பார்ப்போமென்று கனவுகூட கண்டதில்லை" என்கிறான் கொஞ்சம் பக்குவமான அளவுக்கு வளர்ந்திருக்கும் ஒரு பையன்.
பல ஆண்டுகளாக மைதானத்திற்கு வெளியே நின்றிருந்த ஒரு தலைமுறை முதன்முறையாக மைதானத்திற்குள் அடி எடுத்து வைத்திருக்கிறது. அதுவும் உதயநிதி ஸ்டாலின் முயற்சியால். வாழ்த்துகள்.












Click it and Unblock the Notifications