இளையராஜாவை யாரும் விமர்சிக்கக் கூடாது.. முதல்வர் ஸ்டாலின் அறிவுரை.. உதயநிதி தகவல்
சென்னை: இளையராஜாவை யாரும் விமர்சிக்கக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து அவர் சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் மின் தடையை சரி செய்வதற்காக திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி தொகுதி முழுவதும் 108 ஆர்எம்யூக்கள் அதாவது ரிங் மெயின் யூனிட்கள் தேவைப்பட்டன. இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கோரிக்கை வைத்தேன். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 29 இடங்களில் மின்துறையினர் புதிய ஆர்எம்யூக்களை அமைத்தனர்.

இளையராஜாவின் சொந்த கருத்து
ஜூன் மாதங்களுக்குள் மொத்த ஆர்எம்யூக்களும் அமைக்கப்படும். பிரதமர் மோடி குறித்து இளையராஜா கூறியது அவருடைய சொந்த கருத்து. இதில் யாரும் கருத்து சொல்ல வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

யாரையும் அநாகரிகமான முறையில் விமர்சிக்கக் கூடாது
இளையராஜாவை மட்டும் அல்ல யாரை அநாகரிகமாக விமர்சித்தாலும் அது தவறுதான் என்றார். அமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு உதயநிதி, செய்தியாளரிடம் உங்கள் ஆசை என்ன? என கேட்டு கலகலப்பை ஏற்படுத்தினார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என இளையராஜா ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதியது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.

ராஜ்யசபா எம்பி
இளையராஜாவுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்க போகிறார்கள். அதற்காகத்தான் அவர் இவ்வாறு மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசினார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாஜக அரசுக்கு எதிரான பலர் இளையராஜாவை அநாகரீகமான வார்த்தைகளால் விமர்சனம் செய்கிறார்கள்.

விமர்சனங்கள்
இத்தனை விமர்சனங்கள் வந்த நிலையில் தனது கருத்தை திரும்ப பெற மாட்டேன் என இளையராஜா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். மேலும் தான் பதவிக்காக எதையும் பேசவில்லை என்றும் உண்மையைத்தான் சொன்னேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை திமுக சார்பில் இளையராஜாவுக்கு ஆதரவாகவோ எதிராகவோ எந்த கருத்தும் வரவில்லை என கருதிய நிலையில் உதயநிதி ஸ்டாலின் அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications