பத்தே நாள்ல.. நாட்டு சுதந்திர வரலாற்றையே மாத்திட்டீங்களே.. உதயநிதி ஸ்டாலின் வைத்த குட்டு!
சென்னை: தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்ட விவகாரம் குறித்து எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனது ட்வீட்டில் இந்திய சுதந்திர வரலாற்றை மாற்றியது யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியரசு தின விழா ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி அணிவகுப்பு நடத்தப்படும். இதில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் அந்தந்த மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம் பெறும்.
உ.பி. தேர்தல்: தேதி அறிவிச்சு 48 மணி நேரம்தான் ஆச்சு.. பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த 6 எம்எல்ஏக்கள்!
இதில் சுதந்திர போராட்ட தியாகிகள், வீரர்கள், அவர்களின் போராட்டங்கள் குறித்த சிறப்புகளை கூறும் வகையில் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். இந்த அலங்கார ஊர்திக்காக 36 மாநிலங்கள் மாடல்களை அனுப்பியிருந்தன. அதில் 12 மாநிலங்களின் மாடல்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வ.உ.சி
தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழாவில் இடம் பெறுவதற்காக அலங்கார ஊர்தி மாடல் அனுப்பப்பட்டது. அதில் சுதந்திர போராட்டத் தியாகிகளான வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், விடுதலை உணர்வை ஊட்டிய பாரதியார் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில் இந்திய அளவில் மிகவும் பிரபலமான வீரர்களை எதிர்பார்ப்பதாக கூறி மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள்
அது போல் இவர்களை சர்வதேச தலைவர்களுக்கு யாரென்றே தெரியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக தெரிகிறது. தென்னிந்தியாவில் கர்நாடகாவை தவிர தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
உதயநிதி கேள்வி
இந்த நிலையில் இதுகுறித்து சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில் கூறுகையில் வேலு நாச்சியாரின் வீரத்தை வணங்கி கடந்த 3-ம் தேதி ட்வீட் செய்தார் மோடி அவர்கள். நேற்று, வ.உ.சி- வேலு நாச்சியார் திருவுருவம் இடம்பெற்ற குடியரசு தின அணிவகுப்புக்கான தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தியை நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு. இடைப்பட்ட நாட்களில் இந்திய சுதந்திர வரலாற்றை மாற்றியது யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலுநாச்சியார் குறித்து மோடி ட்வீட்
கடந்த 3 ஆம் தேதி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்து போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன் என ட்வீட்டு போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.