விஜயின் பெரியார் அரசியல்.. உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில் என்ன தெரியுமா?
சென்னை : தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து பாஜகவினர் விஜயை விமர்சித்து வரும் நிலையில், பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று (செவ்வாய்க்கிழமை) தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் உள்ள சிலைக்கு, மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பெரியார் திடலுக்கு நேரில் சென்று அவரின் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய நிலையில், கட்சியைத் தொடங்கிய பிறகு முதல்முறையாக அரசியல் நிகழ்வில் விஜய் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
விஜய்யுடன் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்தினர். பெரிய அளவில் நிர்வாகிகள் யாருக்கும் அழைப்பு விடுக்காமல் பொதுச்செயலாளர் ஆனந்த் உடன் பெரியார் திடலுக்கு வந்த விஜய் தானே மலர் தட்டையும் மாலையையும் ஏந்தி வந்து மரியாதை செலுத்தினார். இதுவும் விஜயை வெகுவாக கவனிக்க வைத்தது.
தொடர்ந்து விஜய் வெளியிட்ட அறிக்கையில்,"சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர். மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர். சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்" என கூறியிருந்தார்,

இந்நிலையில், ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்ன விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என பாஜக தலைவர்கள் விமர்சனக் கணைகளை கொடுத்தனர். தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், எச்.ராஜா உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில், பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது பாஜகவினரின் கூடுதல் விமர்சனத்துக்கு வழிவகுத்தது.
அதே நேரத்தில் தந்தை பெரியாரின் பிறந்தநாளான சமூகநீதி நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்த்தூவி வணக்கம் செலுத்தியிருப்பது அவர் விளிம்புநிலை மக்களுக்கானவர் என்பதையும் அவருக்கு சமத்துவமே இலக்கு என்பதையும் உணர்த்துகிறது என விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதுமட்டுமல்லாமல் பல திராவிட இயக்க ஆதரவாளர்களும், திமுக கூட்டணி கட்சியினரும் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் விஜய் பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது குறித்து பதில் அளித்துள்ளார் அமைச்சரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின். இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின்," தமிழக அரசியலை பொறுத்தவரை யாராக இருந்தாலும் பெரியாரைத் தொடாமல் இங்கு அரசியல் செயய முடியாது.. பெரியாரை தொடாமலும் அவரை மீறியும் யாராலும் இங்கு அரசியல் செய்ய முடியாது. நண்பர் விஜய் பெரியாருக்கு மரியாதை செலுத்தியதை வரவேற்கிறேன், அவருக்கு வாழ்த்துகள்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications