ஏழை வீரருக்கு ரூ. 2,20,000.. வேக புயலுக்கு ரூ.12,30,000.. மிஸ்ராவுக்கு 10 லட்சம்! - உதயநிதி கலக்கல்
சென்னை: அடுத்த அடுத்த ஆச்சரியங்கள். லட்சக் கணக்கில் வீரர்களுக்கு நிதி உதவி. விழுந்து கிடந்த தமிழ்நாடு விளையாட்டுத்துறையைப் பொற்காசுகள் கொட்டும் புதிய பூமியாக மாற்றி வருகிறார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இவர் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் விளையாட்டுத்துறை ராக்கெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் விளையாட்டு வீரர்களுக்குப் பல லட்ச ரூபாய்க்கான உதவிகளைச் செய்து தந்துள்ளார் உதயநிதி.

சாதிக்கத் துடிக்கும் சாமானிய குடும்பத்தைச் சேர்ந்த சாய் பிரஜன் கனவை நிறைவேற்றுவதற்காக 2,20,000 ரூபாய் நிதி உதவி அளித்திருக்கிறார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இதைப்போலவே International Track Cycling போட்டியில் கலந்துகொள்ள இருக்கின்ற கெளரி மிஸ்ராவுக்கு உதவிடும் வகையில் 10 லட்ச ரூபாய்க்குக் காசோலை வழங்கி இருக்கிறார்.
இவை மட்டுமா? உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டிகளில் சீனியர், ஜூனியர் மற்றும் யூத் சாம்பியன்ஷிப்பில், தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தனுஷ் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்ற தம்பி கிஷோ ஆகிய இருவரையும் ஊக்கப்படுத்தும் வகையில் தலா ரூ.50,000 மதிப்புள்ள பரிசுப்பொருட்களுக்கான கூப்பன்களை வழங்கி ஆச்சரிய மூட்டி இருக்கிறார்.

அடுத்து இன்னும் தொடர்கிறது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் சாதனைகள். தேசிய படகு போட்டியினை நடத்த இருக்கின்ற Royal Madras Yacht Club-க்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கி ஊக்கப்படுத்தி இருக்கிறார்.
இதைவிட இன்னொரு ஹைலைட் செய்தி இருக்கிறது. சைக்கிளிங் வீராங்கனை தங்கை பூஜா ஸ்வேதா, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக Carbon Frame, Carbon Wheel வாங்குவதற்கு ரூ.12,30,000-க்கான காசோலையை வழங்கி அதிரடி காட்டி இருக்கிறார்.

இப்படி தினம் தினம் உதயநிதியால் உத்வேகம் பெற்று வருகிறார்கள் விளையாட்டு வீரர்கள்.
முதலில் சாமானிய குடும்பத்தைச் சேர்ந்த சாய் பிரஜன் பற்றி பார்ப்போம். இவர் விருதுநகர் மாவட்டம் நடையனேரி கிராமத்தைச் சேர்ந்தவர். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்கவுள்ளார். இதுவரை மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கான செலவுகளைப் பெரிய அளவில் ஸ்பான்சர் இல்லாமலே சமாளித்து வந்தார் சாய் பிரஜனின் தந்தை.

ஆனால், இன்று இந்தோனேசியா வரை போக வேண்டும் என்ற போது நிதி இல்லாமல் விதியை நினைத்து அவர் சோர்வு கொண்டபோதுதான் அவரது நண்பர்கள் உதயநிதியைச் சந்திக்கச் சொல்லி அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். அப்புறம் என்ன? சந்திப்பு நடந்தது. பழைய கால விதி கதைகளை எரிந்து விட்டு இன்று விமானம் ஏறக் காத்திருக்கிறார் சாதனை நாயகன் சாய்.
அவர் என்ன சொல்கிறார்? அவரது அப்பா என்ன சொல்கிறார்?

"சாய் பிரஜனின் அப்பா நான். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறேன். என் மகன் 3 ஆம் வகுப்பு இருந்தே கராத்தே மீது பெரிய ஆவலுடன் ஈடுபட்டு வருகிறான்.
எங்கள் ஊரிலிருந்து விருதுநகருக்குச் செல்ல 30 கிலோமீட்டர் தூரம். ஆனாலும் சிரமம் பார்க்காமல் வண்டியில் அழைத்துப்போய் தினம் போய் அவனைக் கராத்தே கற்க இறக்கிவிட்டு வருவேன். பையன் வளர வளர கராத்தேவில் மிகுந்த ஈடுபாட்டுடன் நன்றாக ஆடி வந்தார்.

மாவட்ட ரீதியாகப் போட்டிகளில் அவன் பங்கேற்கும்போது அது குறித்து பெரிய சுமைகள் எங்களுக்கு இல்லாமல் இருந்தது. ஆனால், மாநில அளவில் தேசிய அளவில் என்று அவன் முன்னேறும்போது நாங்கள் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளானோம்.
என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தோம். எனக்குப் பெரிய அளவில் வருமானம் இல்லை. அவனுக்கு இந்தோனேசியா வாய்ப்பு வந்தபோது வழிதெரியாமல் தவித்தோம். எங்கள் ஏஐடியுசி சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் உதயநிதியைப் பார்த்து உதவிக் கேட்கச் சொன்னார்கள். உடனே சென்று அவரைப் பார்க்க அனுமதி கேட்டோம். உடனடியாகக் கிடைத்தது.

சந்தித்த சில தினங்களில் எங்கள் கோரிக்கையை ஏற்று 2,20,000 ரூபாய்க்கான காசோலையைக் கொடுத்துவிட்டார். அவர் இல்லை என்றால் என் மகன் கனவை நிறைவேற்ற நான் போராட வேண்டி இருந்திருக்கும். அந்த வலியை இல்லாமல் செய்துவிட்டார் விளையாட்டுத்துறை அமைச்சர். அவரை வாழ்நாளில் மறக்க மாட்டேன்" என்கிறார்.
தனக்கு நிதி உதவி கிடைத்தது பற்றி சாய் பிரஜன், "சின்ன வயதிலிருந்தே கராத்தேதான் கனவு. அது என்னமோ தெரியவில்லை. அப்படி ஒரு வெறி. தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்பதற்காகப் பிற மாநிலங்கள் போகும்போது அப்பா ரயில் செல்ல விடமாட்டார்.

ஏனெனில் சோர்வாகி விடுவோம். அங்குச் சென்று சரியாகப் போட்டியில் கவனம் செலுத்த முடியாது. ஆகையால் விமானத்தில்தான் அனுப்புவார். அப்படியான பயண செலவுகளுக்கு எல்லாம் வங்கிக் கடன் பெற்றுத்தான் அனுப்பி வைத்தார்.
நான் சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவன். பெரிய வசதி இல்லை. ஆகவே இந்தோனேசியா வாய்ப்பு வந்தபோது தவித்தேன். இப்போது அந்தக் கனவை விளையாட்டுத்துறை அமைச்சர் உதய் அண்ணா நிறைவேற்றி உள்ளார். எனக்குத் தேவையான பணத்தை வழங்கி உள்ளார். இதற்கு நான் அவருக்கு நன்றி சொல்ல மாட்டேன். நான் போட்டியில் பங்கேற்று விருது மூலம் அவருக்கு என் நன்றியைச் சமர்ப்பிப்பேன். அதுதான் நான் அவருக்குச் செய்யப்போகும் மரியாதை" என்கிறார்

இது குறித்து உதயநிதி அவரது ட்விட்டர் பக்கத்தில், "விருதுநகர் மாவட்டம் நடையனேரி கிராமத்தைச் சேர்ந்த தம்பி சாய் பிரஜன், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்கவுள்ளார். எளிய குடும்பத்தில் பிறந்து - ஏராளமான தடைகளைக் கடந்து சர்வதேச அளவிலானப் போட்டியில் பங்கேற்கவுள்ள தம்பி சாய் பிரஜனுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில், ரூ.2.20 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கி மகிழ்ந்தோம். அவர் பதக்கம் வென்று சாதிக்க வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார்.
கெளரி மிஸ்ராவுக்கு உதவியது தொடர்பான மற்றொரு பதிவில், "நம் விளையாட்டு வீரர் - வீராங்கனையரின் பொருளாதார சூழல், அவர்களின் சாதனைக்குத் தடைக்கல்லாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்கள். பல்வேறு வீரர் - வீராங்கனையருக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை உதவி வருகிறது.

இந்நிலையில், International Track Cycling போட்டியில் பங்கேற்கவுள்ள #Cycling வீராங்கனை சகோதரி கெளரி மிஸ்ராவுக்கு உதவிடும் வகையில், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினோம். அவருக்கு என் வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு பதிவில், "உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டிகளில் சீனியர், ஜூனியர் மற்றும் யூத் சாம்பியன்ஷிப்பில், தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பி தனுஷ் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்ற தம்பி கிஷோரை இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
வெற்றி பெற்ற 2 வீரர்களையும் பாராட்டும் விதமாக தலா ரூ.50,000 மதிப்புள்ள பரிசுப்பொருட்களுக்கான கூப்பன்களை வழங்கினோம். தம்பிகள் தனுஷ் மற்றும் கிஷோரின் வெற்றி பயணம் தொடரட்டும். அவர்களுக்குக் கழக அரசு துணை நிற்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
தேசிய படகுப் போட்டிக்கு நிதி அளித்தது தொடர்பான பதிவில் உதயநிதி, "விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்த, மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
அந்த வகையில், தேசிய படகு போட்டியினை நடத்த Royal Madras Yacht Club-க்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில், ரூ.5 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கி ஊக்கப்படுத்தினோம். தேசிய அளவிலான படகு போட்டியை நடத்தவுள்ள Royal Madras Yacht Club-க்கு என்னுடைய வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார்.
இறுதி பதிவில் அவர், "தமிழ்நாட்டின் விளையாட்டுக் கட்டமைப்பை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள வீரர் - வீராங்கனையர்கள், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்றிட உதவவும், நம் கழக அரசால் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.
அந்தவகையில், #Cycling வீராங்கனை தங்கை பூஜா ஸ்வேதா, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக Carbon Frame, Carbon Wheel வாங்குவதற்கு, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில், ரூ.12,30,000-க்கான காசோலையை இன்று வழங்கி வாழ்த்தினோம். தங்கை பூஜா ஸ்வேதா சர்வதேச மிதிவண்டி போட்டிகளில் சாதனை படைத்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கட்டும்" எனப் பாராட்டி உள்ளார்.
ஆக மொத்தம், இது விளையாட்டுத்துறைக்கே விடிவுகாலம்.












Click it and Unblock the Notifications