“விளையாட்டுத்துறைக்கு இது பொற்காலம்” - உதயநிதி உதவியால் ஜெர்மன் பறக்கும் வீரர்கள்
சென்னை: விளையாட்டுத்துறையே கடந்த சில மாதங்களாக விழாக் கோலம் கொண்டிருக்கிறது. குறிப்பாக உதயநிதி அமைச்சரானதிலிருந்து விளையாட்டுத்துறையில் தினந்தோறும் ஒரு விழா என்பது உறுதியாகி இருக்கிறது.
சமீபத்தில் 'தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை'யைத் தொடங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். கார்பரேட் கம்பெனிகளின் நிதி பங்களிப்புடன் விளையாட்டுத்துறையை வளர்த்தெடுக்க புதிய 'ரூட் மேப்' ஐ உருவாகினார்.
அந்த அறக்கட்டளை தொடக்க விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஒருதுறை சார்ந்த விளையாட்டை மட்டும் ஊக்குவிக்காமல் அனைத்துவிதமான விளையாட்டுகளையும் சமமாக வளர்த்து எடுக்கவேண்டும்" என்ற கருத்தை முன்வைத்திருந்தார். அதாவது விளையாட்டுத்துறையிலும் சமூகநீதியைக் கடைப்பிடியுங்கள் என்று மறைமுகமாக உத்தரவு போட்டிருந்தார் ஸ்டாலின்.
அதை மிகச் சரியாகச் செயல்படுத்தி வருகிறார் உதயநிதி. விளையாட்டுத்துறையில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பையும் உறுதிசெய்யும் வகையில் ஒரு சிறப்பான காரியத்தைச் செய்திருக்கிறார் அவர்.

ஜெர்மனியில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்பதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து 4 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு வழியைத் திறந்து வைத்துள்ளார்.
இது சம்பந்தமாக உதயநிதி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், "ஜெர்மனியில் அடுத்த மாதம் நடைபெறும் #WorldDwarfGames2023 போட்டியில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளி சகோதரர்கள் செல்வராஜ் அழகப்பன், கணேசன் கருப்பையா & மனோஜ் சிங்கராஜா ஆகியோர் தடைகளைக் கடந்து பதக்கங்களுடன் திரும்ப என் அன்பும் வாழ்த்தும்!" என்று கூறியுள்ளார்.

இன்றைய தேதியில் செல்வராஜ், அழகப்பன், கணேசன், மனோஜ் சிங்கராஜா ஆகியோர் ஆனந்த மழையில் நனைந்துவருகிறார்கள். இவர்களின் கனவை மெய்யாக்கித் தந்துள்ள அமைச்சர் உதயநிதியைப் பற்றி இவர்கள் என்ன சொல்கிறார்கள்? கேட்போம்.
"என் பெயர் மனோஜ். நான் மதுரை மாவட்டத்தில் இருக்கின்ற உசிலம்பட்டி அருகே உள்ள உச்சப்பட்டி கிராமத்தில் வசிக்கிறேன். பிறவியிலே குள்ளமாகப் பிறந்தவன் நான். ஆனால், மற்றவர்களைவிட நாம் எந்தவகையிலும் குறைவானவன் இல்லை என்று நினைப்பு மட்டும் சின்ன வயதிலிருந்தே மனதில் உறுதியாக உள்ளது" எனத் தொடங்கும்போதே தன்னம்பிக்கையோடு நம் மனக் கதவைத் தட்டுகிறார்.

"நான் சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். இப்போதும் நான் விவசாய வேலைகளை வீட்டுக்கு ஒத்தாசையாகச் செய்து வருகிறேன். பெரிய அளவில் பொருளாதார பலம் இல்லாத குடும்பம்தான். ஆனால், சின்ன வயதிலிருந்தே விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டும் என்று மனதில் ஊற்று சுரந்துகொண்டே இருந்தது. ஆகவே விடாமல் விளையாட்டுத்துறையில் ஈட்டுப்பட்டு கொண்டே வருகிறேன்" என்கிறார் கணேசன். இவரும் பிறவியிலேயே வளர்ச்சி குறைந்தவர்.
ஆனால், பழமொழி சொல்வதைப்போல் 'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' என்ற அளவில் நம்பிக்கை குறையாமல் அவரது வலிகளை வார்த்தைகளால் நமக்குப் புரியவைக்கிறார்.

"நான் எல்லா நாடுகளுக்கும் கடன் வாங்கி, வட்டிக்கு வாங்கித்தான் போகவேண்டிய நிலை இருந்தது. அரிதாக ஒருசிலர் உதவியும் செய்திருக்கிறார்கள். அவர்கள் எங்களை நம்பி உதவவில்லை என்றால் இந்தளவுக்கு நாங்கள் வந்திருக்க முடியாது" என்கிறார் கணேசன்.
"எட்டாம் வகுப்பு படிக்கும்போது விளையாட்டுத்துறைக்குள் வந்தேன். ஆரம்பத்தில் பாஸ்கட் பால், கிரிக்கெட் எல்லாம் விளையாடினேன். நாங்கள் குள்ளமாக இருந்ததால் பலரும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வதற்குத் தயங்கினார்கள். ஆகவே, வேறு வழியில்லாமல் நமக்கு ஏற்ற விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன்.
மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி முதன்முதலாக 2014இல் சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசுதான் அந்தப் போட்டியை நடத்தியது. அப்போதுதான் நமக்கு என்று தனி விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றது என்பதையே தெரிந்துகொண்டேன். அதில் பங்கேற்று ஒரு தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கம் வென்றேன். அந்தத் தருணத்தை என்னால் மறக்கவே முடியாது.

நம்மாலும் வாழ்க்கையில் பல சாதனைகளைச் செய்ய முடியும் என நம்பிய தருணம். இதுவரை 9 நாடுகளுக்குச் சென்று இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாகப் பல போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களைப் பெற்றிருக்கிறேன். எட்டாவது World Dwar fGames 2023 ஜெர்மனியில் நடைபெற உள்ளது. அதற்காகத்தான் நாங்கள் மிகக்கடினமாக உழைக்கிறோம். இந்தப் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடைபெறும். அந்தப் போட்டியில் பங்கேற்கத் தமிழ்நாடு சார்பாக மொத்தம் நாங்கள் 4 பேர் தேர்வாகி இருக்கிறோம்" என்கிறார் மனோஜ்.
"இதுவரைக்கும் நான் 8 நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று இருக்கிறேன். அத்தனை நாடுகளுக்கும் எனது சொந்த செலவிலும், பலர் உதவியாலும் சென்று வந்துள்ளேன்" என்கிறார் செல்வராஜ்.
"இந்த ஆட்சி விளையாட்டுத்துறைக்குப் பொற்காலமாகத்தான் நான் சொல்லுவேன்" என்கிறார் கணேசன்

"விளையாட்டுதான் என்னை இந்தளவுக்கு உயர்த்திக் காட்டி இருக்கிறது. வேறு எதுவுமே காட்டவில்லை. அதற்காக நான் பெருமைப்படுகிறேன். தெம்பாக உணர்கிறேன்" என்கிறார் கணேஷ்.
வெளிநாட்டில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்வதற்காக ஒருமுறை மட்டும் சென்று வர எங்களுக்கு 2 முதல் இரண்டரை லட்சம் வரை செலவாகும். அதற்காக நாங்கள் பணத்தைத் திரட்டப் போராடுவோம்.
ஆனால், அந்தக் கஷ்டம் இனி இல்லை. விளையாட்டுத்துறை அமைச்சர் உதய் அண்ணா, தமிழ்நாடு சாம்பியன்ஷிப் அறக்கட்டளையைத் தொடங்கி இருக்கிறார்.
அதிலிருந்து எங்களுக்கு நிதி உதவி செய்திருக்கிறார். நாங்கள் முன்பே அரசுக்குக் கோரிக்கை மனு அளித்திருந்தோம். அதை அறிந்து அமைச்சர் உதய் அண்ணா எங்களை அழைத்துப் பேசினார். எங்கள் தேவைகள் என்ன? என்று கேட்டு அறிந்தார். நாங்களும் தெளிவாகச் சொன்னோம்.
இதற்கு முன்பாக இருந்த அரசிடம்கூட பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால், ஒருமுறைகூட அந்த அரசிடமிருந்து ஒரு பதிலும் எங்களுக்கு வந்ததே இல்லை.

இந்தமுறை அப்படி இல்லை. உதய் அண்ணாவே ஒட்டுமொத்த செலவையும் ஏற்கிறார். விசா செலவிலிருந்து விமான செலவு தங்கும் விடுதி உட்பட அனைத்தையும் அவரே செய்து தந்திருக்கிறார். நாங்கள் ஆச்சரியத்தில் மூழ்கிப் போய்விட்டோம். அவர் உடனடியாக இதைச் செய்வார் எனக் கனவில்கூட நினைக்கவில்லை" என்கிறார் மனோஜ்.
"இதற்கு ஒட்டுமொத்தமாக என்ன செலவாகும் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். இவ்வளவு பெரிய தொகையை எங்களை நம்பி, நாங்களும் விளையாட்டு வீரர்கள்தான் என்பதை உணர்ந்து உதய் அண்ணா இதைச் செய்திருக்கிறார்.
ஒரு விவசாய குடும்பத்திலிருந்துவந்த எனக்குத்தான் இது எவ்வளவுப் பெரிய உதவி என்பது தெரியும். அவரை நாங்கள் வாழ்நாள் முழுக்க மறக்கமாட்டோம். அந்தளவுக்கு மரியாதை கொடுத்திருக்கிறார்.
அவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எங்களது மிகப் பெரிய நன்றி. அவர்கள் வைத்த நம்பிக்கைக்கு வெற்றியின் மூலம் நன்றி சொல்வோம்" என்கிறார் கணேசன்.
"எல்லோரும் விளையாட்டு வீரர்கள்தான். ஆனால், பலரும் அப்படி நினைப்பதில்லை. உதய் அண்ணா எங்களை மாற்றுத்திறனாளிகள் எனப் பிரித்துப் பார்க்காமல் உதவி இருக்கிறார். அந்த மனசுதான் முதலில் நாங்கள் விரும்புவது. அதை நினைத்தால் உடம்பு சிலிர்க்கிறது" என்கிறார் செல்வராஜ்.
வென்று உயர வாழ்த்துகள்.












Click it and Unblock the Notifications