அத்தை கனிமொழி மீது அன்பு- சிஐடி காலனி வீட்டுக்கு போய் சால்வை அணிவித்து வாழ்த்திய உதயநிதி!
சென்னை: திமுகவின் துணை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி எம்.பி.யின் வீட்டுக்கு நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.
திமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் பதவியில் இருந்தும் தீவிர அரசியலில் இருந்தும் விலகினார். இதனையடுத்து அந்த பதவிக்கு யார் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிற விவாதம் நடந்தது.
திமுகவின் புதிய மகளிரணி செயலாளர் யார்? ஸ்டாலின் கொடுத்த சுதந்திரம்? கனிமொழி கைகாட்டும் பெண்
திமுக பொதுக்குழு
சென்னையில் நேற்று திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுகவின் புதிய துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்படுவதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அப்போது கனிமொழிக்கு, கர்ஜனை மொழி கனிமொழி என பாராட்டினார்.
உதயநிதி பாராட்டு
மேலும் வாழ்த்துரையாற்றிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழியை அத்தை என பாசத்துடன் குறிப்பிட்டு வாழ்த்தினார். உதயநிதி, கனிமொழியை அத்தை என உரிமையோடு பொதுக்குழு மேடையில் அழைத்து பேசிய போது அரங்கம் அதிர கைதட்டல் பறந்தது.
அத்தை கனிமொழி..
பொதுக்குழுவில், புதிதாக துணை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள என்னுடைய அத்தை, நம்முடைய தலைவரின் தங்கை, தலைவர் கருணாநிதியின் அன்பு மகள், அத்தை கனிமொழி கனிமொழி அவர்களே.. என உதயநிதி பேச, அன்பின் மழையில் நனைந்தபடி நெகிழ்வின் உச்சியில் திளைத்து கொண்டிருந்தார் கனிமொழி எம்.பி.
சால்வை அணிவித்தும் வாழ்த்து
அத்துடன் உதயநிதி நிற்கவில்லை. பொதுக்குழு கூட்டம் முடிந்த பின்னர், சென்னை சிஐடி காலனியில் உள்ள கனிமொழி வீட்டுக்கு சென்றார். அங்கு அத்தை கனிமொழிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒரு பக்கம் கறுப்பு நிற சோபாவில் கனிமொழி, மறுபக்கம் உதயநிதி ஸ்டாலின் அமர்ந்திருக்க நடுவில் இன்னொரு சோபாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் வைக்கப்பட்டிருந்தது.
ராஜாத்தி அம்மாளிடம்..
பின்னர் பாட்டி ராஜாத்தி அம்மாளிடமும் பேரன் உதயநிதி நலம் விசாரித்து நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தார். அண்மையில் ராஜாத்தி அம்மாள் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக சென்று திரும்பியிருந்தார். இது தொடர்பான படங்களை உதயநிதி தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், கழகத்தின் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அத்தை @KanimozhiDMK அவர்களை இன்று சி.ஐ.டி காலனி இல்லத்தில் சந்தித்து, புதிய பொறுப்பிலும் அவரின் கழகப் பணிகள் சிறக்க என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்து மகிழ்ந்தேன் எனவும் உதயநிதி பதிவிட்டுள்ளார்.