பாம்பு.. தவளை.. மான்.. அரசியலை இணைத்து குட்டிக்கதை சொன்ன உதயநிதி ஸ்டாலின்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடந்த விழா ஒன்றில், பாம்பு - தவளை - மான் பற்றி ஒரு குட்டிக்கதை சொன்னார். உதயநிதி ஸ்டாலின், பாஜக, அதிமுகவை வைத்து அரசியலோடு ஒப்பிட்டு குட்டிக்கைதை கூறியுள்ளார்.
சென்னை பிராட்வே பகுதியில் உள்ள டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று இரவு (டிசம்பர் 21) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 2000 பேருக்கு அரிசி, சேலை, இனிப்பு மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உதயநிதி பேச்சு
இந்த விழாவில் பேசிய தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நானும் ஒரு பெருமையான கிறிஸ்தவன் என்று சொன்னதால் பாஜகவினருக்கு எல்லாம் வயிற்றெரிச்சல். நீங்கள் என்னை கிறிஸ்தவன் என்று நினைத்தால் நான் கிறிஸ்தவன், இந்து என்று நினைத்தால் இந்து, முஸ்லிம் என்று நினைத்தால் முஸ்லிம் என்று நான் சொன்னேன். அனைவருக்கும் பொதுவானவன் நான். அனைத்து மதங்களும் அன்பைத்தான் போதிக்கிறது. மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் மக்கள் மத்தியில் பொய்யைச் சொல்லி வெறுப்பை பரப்புவார்கள். மதத்தின் பெயரால் பரப்பப்படும் வெறுப்பினை வீழ்த்துவோம்.
மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்கள்தான், வெறுப்பை பரப்பவர்கள்தான் என்று நினைத்தோம். ஆனால் சமீபத்தில் ஒரு நீதிபதி மத வெறுப்புக் கருத்துகளை பொதுவெளியில் பேசியதை நாம் பார்த்தோம். இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புக் கருத்துக்களை பேசியிருக்கிறார். அந்த நீதிபதியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தனர். அதற்குக் கூட அதிமுக ஆதரவு அளிக்கவில்லை. அந்த அளவுக்கு பாஜக மீது அவர்களுக்கு பயம்.
அரசியலமைப்பிற்கு எதிராக பேசியுள்ள நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் தீர்மானத்திற்கும் கூட ஆதரவளிக்காத அதிமுகவிற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். பாஜக கொண்டு வந்துள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கும் அதிமுக ஆதரவு அளித்துள்ளது. இதன் மூலம் அவர்கள் கூட்டணி வலுவாக உள்ளது என்று தெரிகிறது. அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பாஜகவை எதிர்த்து ஒரு தீர்மானம் கூட இல்லை” என விமர்சித்தார்.
உதயநிதி சொன்ன குட்டிக்கதை
மேலும், குட்டிக் கதை ஒன்றையும் கூறினார் உதயநிதி ஸ்டாலின். “ஒரு ஊரில் கடுமையான வறட்சி. அந்த வறட்சியால் நிலங்கள் எல்லாம் வெடித்துப் போய் உள்ளது. அங்கு பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று வருகிறது. சூடு தாங்க முடியாமல் பாம்பு தனது தலை மற்றும் உடலைத் தூக்கிக் கொண்டு வாலை மட்டுமே தரையில் வைத்து நகர்கிறது. அந்தப் பாம்பின் நிழலில் ஒரு தவளை ஒதுங்குகிறது. பாம்பு கீழே குனிந்து தவளையைப் பார்த்தால் தவளையின் நிலைமை என்ன என்று நமக்குத் தெரியும். தவளையின் கதை அவ்வளவு தான்.
இன்னொரு கதை! ஒரு தாய் மானும் குட்டி மானும் பாலைவனத்தில் நடந்து சென்று கொண்டிருக்கின்றன. கடுமையான வெயில், தாங்க முடியவில்லை. குட்டி மானால் நடக்க முடியவில்லை. தாய் மான் நின்று கொண்டு அதன் நிழலில் குட்டி மானை ஓய்வெடுக்கச் சொல்கிறது. கொளுத்தும் வெயியை தான் தாங்கிக் கொண்டு குட்டிமானுக்கு நிழல் கொடுக்கிறது தாய்மான்.












Click it and Unblock the Notifications