ஏறிப்போச்சு.. ஏறிப்போச்சு.. அடிவயிற்றிலிருந்து எம்.எல்.ஏ எழுப்பிய குரல்.. திரும்பிப்பார்த்த உதயநிதி
சென்னை: மத்திய அரசுக்கு எதிராக சென்னை அன்பகத்தில் நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில், திமுக எம்.எல்.ஏ. தாயகம் கவி தனது அடிவயிற்றிலிருந்து எழுப்பிய போர்க்குரல் அங்கிருந்த உதயநிதி ஸ்டாலினை ஒரு நொடி திரும்பிப்பார்க்க வைத்தது.
முதலில் ஆர்ப்பாட்ட வாசகங்களை மெல்லிய குரலில் முழங்கிய திமுகவினர், தாயகம் கவி எம்.எல்.ஏ.வின் உணர்ச்சிபிழம்பான குரலால் அவர்களும் தங்கள் குரலை உயர்த்திக் கொண்டனர்.
உதயநிதி ஸ்டாலினோடு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இளைஞரணி
மத்திய அரசுக்கு எதிரான கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் திமுக இளைஞரணி தலைமையகமான அன்பகத்தில் நடைபெற்றது. 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கவிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே அங்கு வந்துவிட்டார் உதயநிதி ஸ்டாலின். அன்பகம் சென்னையின் பிரதான சாலையில் அமைந்துள்ளதால், அதன் நுழைவு வாயிலில் நின்றபடி போராட்டத்தை தொடங்கலாமா என அருகில் இருந்த மாவட்ட பொறுப்பாளர் மயிலை வேலு எம்.எல்.ஏ.விடம் உதயநிதி கேட்டார்.

உரத்த குரல்
பின்னர் உதயநிதி ஸ்டாலினுக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த கருப்புக்கொடி அவர் கையில் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளரும், திரு.வி.க.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தாயகம் கவி, தனது அடிவயிற்றிலிருந்து போர்க்குரல் எழுப்பத் தொடங்கினார். கைகளை உயர்த்தி ஆக்ரோஷமாக மத்திய அரசுக்கு எதிராக, ''ஏறிப்போச்சு.. ஏறிப்போச்சு.. விலைவாசியெல்லாம் ஏறிப்போச்சு..'' ''காப்பாத்து.. காப்பாத்து..'' ''ஆர்ப்பாட்டம் இது ஆர்ப்பாட்டம்'' என எந்த காகிதத்தையும் பார்க்காமல் போர்ப்பாட்டு பாடத் தொடங்கினார்.

கோரிக்கைகள்
வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், பொருளாதார சீரழிவை சரிசெய்ய வேண்டும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் எண்ணத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அங்கு எழுப்பப்பட்டன. பொதுவாக எம்.எல்.ஏ., எம்.பி.யாக இருப்பவர்கள் இது போன்ற பணிகளை கீழ்மட்ட நிர்வாகிகளிடம் கொடுத்துவிட்டு கவுரமாக நின்றுவிட்டு வருவார்கள்.

படிப்படியாக
தாயகம் கவியின் வேகத்தையும், உணர்ச்சிப்பிழம்பான குரலையும் கேட்டு உதயநிதி ஸ்டாலின் குரலும் அங்கு உயரத் தொடங்கியது. இதையடுத்து மெல்லிய குரலில் ஆர்ப்பாட்ட குரல் எழுப்பி வந்த திமுகவினர் ஹை பிட்ச் மோடுக்கு மாறினர். பள்ளிப்பருவம் முதல் திமுக நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் பங்கெடுத்து வரும் தாயகம் கவி, மாணவரணி, இளைஞரணி, எம்.எல்.ஏ. என படிப்படியாக முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications