செஸ் ஒலிம்பியாட் போலவே.. ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்.. உதயநிதி மாஸ்டர் பிளான்.. அப்படியே மாறும் சென்னை
சென்னை: ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பிற்கு முன்னதாக சென்னையை மொத்தமாக அழகுபடுத்தும் திட்டத்தில் சென்னை பெருநகர ஆணையம் களமிறங்கி உள்ளது.
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் சென்னையில் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்க உள்ளது. சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் பெரிய வெற்றிபெற்றது போலவே இந்த தொடரையும் உலக நாடுகள் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு நடத்த முடிவு செய்துள்ளனர்.

அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறைக்கு வந்த பின், அவர் தலைமையில் நடக்கும் முதல் மிகப்பெரிய சர்வதேச நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. இதனால் இதை மிக பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமாக உலக நாடுகள் திரும்பி பார்க்கும் அளவிற்கு ஹாக்கி தீமில் இந்த தொடர் நடத்தப்பட உள்ளது.
ஹாக்கியை மையமாக வைத்து விரைவில் பாடல், வீடியோ ஆகியவை வெளியிடப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது விரைவாக நடந்து வருகின்றன.
அதன் ஒரு கட்டமாக ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பிற்கு முன்னதாக சென்னையை மொத்தமாக அழகுபடுத்தும் திட்டத்தில் சென்னை பெருநகர ஆணையம் களமிறங்கி உள்ளது. மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் அருகே உள்ள காந்தி இர்வின் சாலையை அழகுபடுத்தும் பணி கடந்த திங்கள்கிழமை இதற்காக தொடங்கியது.
இதற்கு அருகே இருக்கும் சாலைகளையும் அழகுபடுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பகுதியை நோக்கி செல்லும் சாலைகள் அனைத்தையும் தூய்மைப்படுத்தி அழகுபடுத்தும் பணிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் மூலம் முடுக்கிவிடப்பட்டு உள்ளது.
இவர்கள் இருவரும் மேற்கொண்ட ஆலோசனைக்கு பின்பாக என்ன மாதிரியான அழகுபடுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இப்பணியை இம்மாத இறுதிக்குள் முடிக்க மற்ற நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட பொறியாளர்களுக்கு மாநகராட்சி வடக்கு மண்டல துணை கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
மழை காலம் நெருங்குவதால் இங்கே தண்ணீர் தேங்காமல் இருக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் ஹாக்கி போட்டியின் போது மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்திற்கு அருகே 8,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்க்கிங் இடங்களை அடையாளம் காண பல்வேறு ஏஜென்சிகளை களமிறக்க திட்டமிட்டுள்ளன. அதேபோல் போட்டியை முன்னிட்டு எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பொதுப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதேபோல் இங்கே பயிற்சி மேற்கொள்ளவும் பல்வேறு சூழ்நிலைகள் உருவாக்கப்பட உள்ளன. அதேபோல் இங்கே மக்கள் எளிதாக நடக்க பாந்தியன் சாலை, எத்திராஜ் சாலை மற்றும் ஆதித்தனார் சாலை மற்றும் காந்தி இர்வின் சாலை பாலம் சந்திப்புகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளனர். அதேபோல் எழும்பூர், புதுப்பேட்டை மற்றும் சிந்தாதிரிப்பேட்டை போன்ற பகுதிகளில் ஆகஸ்ட் முதல் இரண்டு வாரங்களில் ஏராளமான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கூவம் பகுதி அருகே வேலி அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு சென்னையில் செஸ் ஒலிம்பியாட் விழா நடைபெற்றது. அதை போலவே இந்த விழாவை நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications