சேலம் மாவட்டத்தில் அதிமுக ஜெயித்தது எப்படி? திமுக நிர்வாகிகளிடம் உதயநிதி கிடுக்கிப்பிடி!
சென்னை: சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் திமுக தீயாய் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சென்னை அழைத்து தினமும் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் திமுக 10 தொகுதிகளில் தோல்வியை தழுவியது எப்படி எனக் கேட்டிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து இந்த கேள்வி வரும் என்பதை எதிர்பார்க்காத பலரும் திகைத்து விட்டார்கள். இரண்டரை வருஷத்துக்கு முன்னால் அடைந்த தோல்வி குறித்து இப்போது எதற்கு கேட்கிறார் என பலரும் கப்சிப்பென்று அமர்ந்திருந்த நிலையில், திமுக நிர்வாகிகள் சிலர் அதிமுகவுடன் அண்டர் டீலிங்கில் ஈடுபடுவது குறித்து சூசகமாக கூறிய உதயநிதி ஸ்டாலின் சில முக்கிய இன்ஸ்ட்ரக்சன்ஸ்களை கொடுத்து அனுப்பியிருக்கிறார்.
போதா குறைக்கு சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினருமான கே.என்.நேரு தனது பாணியில் சில கட்டளைகளை போட்டு சேலம் மாவட்ட நிர்வாகிகளை ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் மேற்கு மண்டலத்தை இன்சார்ஜ் எடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின், சேலத்துடன் சேர்த்து கோவை, திருப்பூர் மக்களவைத் தொகுதிகள் மீதும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.

யாரெல்லாம் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டுகிறார்களோ அவர்களுக்கு எல்லாம் கட்சிப் பொறுப்புகளில் இருந்து ஓய்வு கொடுத்துவிடுவது என்ற முடிவோடு உள்ள அவர் அதற்கேற்றவாறு இப்போதே நிர்வாகிகளை எச்சரித்து அனுப்புகிறார். தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.பாரதி, எவ வேலு உள்ளிட்டோரும் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications