உதயநிதி கட்சி பதவியை குறிப்பிட்டு அரசு அறிக்கை.. வெடித்த சர்ச்சையால் மாற்றம்! அதிலும் மிஸ்டேக்!
சென்னை: உதயநிதி ஸ்டாலினின் கட்சி பதவியை குறிப்பிட்டு தமிழக அரசு இன்று வெளியிட்ட தகவலால் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அதனை திருத்தம் செய்து மீண்டும் செய்தி வெளியிட்டது தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்பட்டு வருவதாக தமிழக அரசு இன்று தகவல் வெளியிட்டது. இதன் காரணமாக அவர் கலந்து கொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு அரசின் செய்தித்துறை சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டது.

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை
இந்த அறிக்கை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வாயிலாக வெளியிடப்பட்டது. இது தொடர்பான அறிக்கையில், "கழக இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், அடுத்த சில நாட்களுக்கு, அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். அதனால் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசு அறிக்கையில் கட்சி பதவி
தமிழ்நாடு அரசின் சார்பாக வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பதவி குறிப்பிடப்பட்டிருந்தது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை, கழக இளைஞரணி செயலாளர் என்று குறிப்பிட்டு தமிழக அரசின் செய்தித் துறை செய்தி குறிப்பை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நீக்கினாலும் மிஸ்டேக்
பின்னர், இந்தச் செய்திக்குறிப்பு நீக்கப்பட்டு, மற்றொரு செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் கட்சி பொறுப்பு இடம்பெறவில்லை. எனினும், அதிலும் கூட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்று வருவதற்கு பதில், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது, கழக இளைஞரணி செயலாளரும் என்பதை நீக்கிய செய்தித் துறை, துணை முதலமைச்சருமான என்பதில் 'ருமான' என்பதை நீக்கவில்லை. இது சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.












Click it and Unblock the Notifications