திமுக ஆட்சி மலரும் நாளில்... நீட் தேர்வு விலக்கு உறுதி- உதயநிதி ஸ்டாலின்
சென்னை: திமுக ஆட்சி மலரும் நாளில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு உறுதியாக விலக்கு கிடைக்கும் என அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், கழகம் ஒருநாளும் அனிதாக்களை மறக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொடுமை
பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் பண்படுத்திய தமிழக மண்ணில், சமூக நீதிக்கு எதிரான சித்தாந்தங்கள் கடந்த சில ஆண்டுகளாக முளைவிடத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பாடசாலைகள் வழியாக அநீதிகள் நிகழ்த்தப்படுவதாகவும், இது மிகப்பெரிய கொடுமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தடுக்கவில்லை
சமூக நீதிக்கு எதிரான சித்தாந்தங்களை தடுத்து நிறுத்த வேண்டிய ஆட்சியாளர்களோ, பூங்கொத்து அளித்து அவற்றை வரவேற்பதாக கூறியுள்ளார். அதற்கு நீட் தேர்வு தொடர்பான வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளி விவரங்களே சான்று எனத் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு
சமூக நீதிக்கு எதிராக தகுதியற்ற முறையில் நடத்தப்படும் தேர்வு முறையைத் தான் தகுதி தேர்வு என்கிறது அரசு எனவும், இந்த தேர்வு முறையில் அனிதாக்களுக்கும், பிரதீபாக்களுக்கும் ஏது இடம் என உதயநிதி ஸ்டாலின் வினவியுள்ளார். அவர்களால் லட்சங்களை செலவழிக்கவும் முடியாது, ஆண்டுகள் பல காத்திருக்கவும் முடியாது என தெரிவித்துள்ளார்.

உதயநிதி உறுதி
மேலும், ஒன்றை மட்டும் நினைவுப்படுத்த விரும்புவதாகவும், இந்திய துணைக்கண்டத்திற்கே சமூக நீதியை கற்றுக்கொடுத்த சுயமரியாதை இயக்கத்தின் வழிவந்த திமுகவின் ஆட்சி மலரும் நாளில், நீட் தேர்விலிருந்து விலக்கு என்பது உறுதி எனக் கூறியுள்ளார். கழகம் ஒருநாளும் அனிதாக்களை மறக்காது என்றும், ஏனெனில் கழகம் அனிதாக்களுக்காக உருவாக்கப்பட்டது எனவும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications